Published : 29 Apr 2025 12:11 AM
Last Updated : 29 Apr 2025 12:11 AM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நிர்வாகத்தின் தூண்கள், அரசின் கரங்களாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். தேசிய அளவில் தமிழகம் பல்வேறு வகையில் முதல் இடத்திலும், முன்னோடி மாநிலமாகவும் திகழ்வதற்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உழைப்பு, சீரிய பங்களிப்பும் மிக முக்கிய காரணம். எனவே, அவர்களது நலன் கருதி தற்போது அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
ஈட்டிய விடுப்பு: கரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு நிதிநிலையில் ஏற்பட்ட பெரும் சுமையால் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஈட்டிய விடுப்பை 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் 2026 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும், அரசு ஊழியர்களின் கோரிக்கை அடிப்படையில் பரிசீலித்து, ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சரண் செய்து பணப் பயன் பெறலாம். இதனால், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கும்.
அகவிலைப்படி: மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநில அரசு ஊழியர்களுக்கும் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதனால், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதை நடைமுறைப்படுத்த ஆண்டுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி செலவிடப்படும்.
பண்டிகை முன்பணம்: அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
கல்வி முன்பணம்: அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம், இந்த ஆண்டில் இருந்து தொழிற்கல்வி பயில ரூ.1 லட்சம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் பயில ரூ.50 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும்.
திருமண முன்பணம்: திருமண முன்பணமாக தேவையின் அடிப்படையில் பணிக் காலத்தில் இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது இனிமேல், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகை: பொங்கல் பண்டிகைக்கு முன்பு, கிராம பணியமைப்பு உட்பட ‘சி’, ‘டி’ பிரிவு ஓய்வூதியர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 4.71 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.24 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
ஓய்வூதியர் பண்டிகை முன்பணம்: ஓய்வூதியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 52 ஆயிரம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ரூ.10 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
ஓய்வூதிய திட்டம் :பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராய ஒரு குழு அமைத்து, அந்த குழு தனது அறிக்கை, பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அடிப்படையில், இந்த குழு தனது அறிக்கை, பரிந்துரையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும்.
தகுதிகாண் பருவம்: திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறுக்காக வழங்கப்பட்ட 9 மாத விடுப்பை, கடந்த 2021 ஜூலை 1-ம் தேதி முதல் ஓராண்டு காலமாக உயர்த்தி, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலம், தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக, அரசுப் பணிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுக்கும்போது, உரிய காலத்தில் தகுதிகாண் பருவத்தை முடிக்க இயலாமல், அவர்களது பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. பணிமூப்பை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களது தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில், அரசு ஊழியர்களுக்கு அரணாக, அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு தொடரும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச்செல்வன் (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), அப்துல் சமது (மமக), சதன் திருமலைகுமார் (மதிமுக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று பேசினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வருக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT