Published : 28 Apr 2025 06:45 AM
Last Updated : 28 Apr 2025 06:45 AM
சென்னை: பூந்தமல்லி - போரூர் வரை 9.1 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (ஏப்.28) நடைபெற உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவற்றில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
அதிலும், போரூர் - பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் தற்போது உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின்பாதை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவுக்கு சோதனை ஓட்டம் ஜன.20-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பூந்தமல்லி - போரூர் வரை ஒரு வழிப்பாதையில் சோதனை ஓட்டம் ஏப்.28-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையில் (மேல் பாதை) தண்டவாளம் அமைக்கும் பணி கடந்த வாரம் முடிந்தது.
தற்போது, இப்பாதையில் உயர்நிலை மின்பாதை அமைக்கும் பணியும் 100 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இதைத் தொடர்ந்து, பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான (9.1 கி.மீ) ஒருவழி பாதையில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை (ஏப்.28) மாலை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் உள்பட பல்வேறு உயரதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிடுவார்கள்.
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை, பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் பைபாஸ், போரூர் சந்திப்பு ஆகிய நிலையங்கள் இடம்பெற உள்ளன. மற்றொரு பாதையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT