Published : 28 Apr 2025 12:28 AM
Last Updated : 28 Apr 2025 12:28 AM
தமிழகத்தில் இன்றுமுதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.29 முதல் மே 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 3-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப் 29 முதல் மே 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, நெய்யூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றாறு, குளச்சல், சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT