Published : 27 Apr 2025 03:03 PM
Last Updated : 27 Apr 2025 03:03 PM
கோவை: பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் என மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளாத நாடு ஒன்று உள்ளது என்றால் அது பாகிஸ்தான் தான். வங்கதேசத்தை இழந்தும் தற்போது வரை தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளதே தவிர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை.
மீண்டும் இந்தியாவை சீண்டியிருக்கும் பாகிஸ்தானுக்கு, சரியான பாடத்தை இந்தியா கற்றுக்கொடுக்கும். இஸ்லாமியர்கள் என்பது வேறு இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது வேறு. இதனை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பது தான் எனது கனிவான வேண்டுகோள்.
தமிழக ஆளுநர் விவகாரத்தை பொருத்தவரை, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இரு வேறு விதமாக உள்ளன. கேரள ஆளுநர், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் என்று அதே உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இப்போது அதற்கு மாறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களைக் கொண்டு இதற்கு சரியான தீர்வை காண வேண்டும். இதுபோன்ற கருத்து மோதல்கள் நல்லதல்ல. உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படும் நிலையில் மிரட்டல் என்பது தமிழகத்தில் சாதாரண ஒன்று தான். இதில் துணைவேந்தர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT