Published : 24 Apr 2025 09:41 AM
Last Updated : 24 Apr 2025 09:41 AM
மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு பரங்கிப்பேட்டையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மணிமண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ராஜேந்திரனின் சமாதிக்கு அருகிலுள்ள இடத்தை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்திருப்பது பரபரப்பான செய்தியாகி இருக்கிறது.
1965-ல் மத்திய அரசின், இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தன்னெழுச்சியான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அடக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் பலியானார். சிவகங்கை மாவட்டம் கல்லலைச் சேர்ந்த ராஜேந்திரனின் உடல் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள ரங்கப்பிள்ளை மண்டபத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக முகப்பில் ராஜேந்திரனுக்கு சிலையும் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகள் தினத்தில் மாணவர்கள், திமுக, அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த போது, மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதை ஏற்று ‘மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சமாதி உள்ள பரங்கிப்பேட்டையில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து பரங்கிப்பேட்டையில் ராஜேந்திரன் சமாதி அமைந்துள்ள இடத்தை புவனகிரி வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். அந்த இடமானது ராஜேந்திரனின் குடும்பத்தினர் பெயரில் உள்ளது.
இந்த நிலையில், ராஜேந்திரனின் சமாதி அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 4.1 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், அதை கடந்த 21-ம் தேதி தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். தமிழக அரசு ராஜேந்திரனுக்கு மணிபண்டபம் கட்டுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது நினைவிடத்தைச் சுற்றியுள்ள இடத்தை சீமான் கிரையம் பெற்றுள்ளது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் முத்து பெருமாள், “ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகள் தினத்தில் திமுக சார்பில் தியாகி ராஜேந்திரன் சமாதியில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்த பிறகு அவசரமாக ஓடி வந்து ராஜேந்திரன் சமாதியில் மாலை வைத்து மரியாதை செய்கிறார் சீமான். இத்தனை நாளும் அவர் எங்கே போயிருந்தார்? அதேபோல், மணிமண்டபம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாராகி வரும் நிலையில், திடீரென ராஜேந்திரன் சமாதிக்கு அருகில் சீமான் இடம் வாங்குகிறார். பகட்டு அரசியலுக்காகவே அவர் இப்படிச் செய்கிறார். அவரது நடிப்பு அரசியல் எல்லாம் தமிழக மக்களிடம் எடுபடாது” என்றார்.
நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் வே.மணிவாசகனிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்த 400 தியாகிகளின் தியாகத்தைப் பயன்படுத்தி 1967-ல் ஆட்சிக்கு வந்த திமுக 58 ஆண்டுகளாக ராஜேந்திரனுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. இப்போது, அவர் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் நாதக நினைவு மண்டபம் கட்டப்போவதைக் கேள்விப்பட்டு முந்திக் கொண்டு 30 நாட்களுக்கு முன்பு மணிமண்டபம் கட்டும் அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
சீமான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ராஜேந்திரனின் சமாதி அருகே உள்ள நிலத்தின் உரிமையாளரிடம் பேசி 4.1 சென்ட் நிலத்தை கிரையம் பெற்று சீமான் பெயரில் பதிவு செய்துள்ளோம். சீமான் உறுதியளித்தபடி மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு அந்த இடத்தில் மிக அழகிய மணி மண்டபத்தை கூடிய விரைவில் கட்டி அதன் திறப்பு விழாவை ஒரு மாநாடு போல நடத்த தீர்மானித்திருக்கிறோம்” என்றார்.
இத்தனை நாளும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் நினைவிடத்தில் தமிழக அரசும் சீமானும் மணிமண்டபங்களை கட்டுவதற்கு போட்டிபோட்டுக் கொண்டு முஸ்தீபு காட்டுவதால் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது பரங்கிப்பேட்டை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT