Last Updated : 23 Apr, 2025 08:23 AM

1  

Published : 23 Apr 2025 08:23 AM
Last Updated : 23 Apr 2025 08:23 AM

மேயர் பதவியை துறந்தார்... வார்டு மக்களை மறந்தார்..? - கோவை முன்னாள் மேயர் கல்பனாவை சுற்றும் சர்ச்சைகள்

திமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2024 மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மேயராக இருந்தபோது தனது வார்டு மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்ட கல்பனா, மேயர் பதவி ராஜினாமாவுக்குப் பிறகு வார்டு மக்களை கண்டும் காணாது ஒதுங்கிவிட்டதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.

கோவை மாநக​ராட்​சி​யின் 100 வார்​டு​களில் 96 வார்​டு​களை திமுக-​வும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளும் வசப்​படுத்தி வைத்​திருக்​கின்​றன. மேயர் பதவி இம்​முறை பெண்​களுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தால் திமுக முக்​கிய நிர்​வாகி​கள் பலரும் தங்​களது மனை​வி​யரை வார்டு கவுன்​சிலருக்கு நிறுத்தி ஜெயிக்க வைத்​திருந்​தார்​கள். இதனால், யாருக்கு மேயர் யோகம் அடிக்​குமோ என்ற எதிர்​பார்ப்பு திமுக-​வினர் மத்​தி​யில் இருந்​தது.

இந்த நிலை​யில், 19-வது வார்டு கவுன்​சில​ரான கல்​பனா ஆனந்​தகு​மாருக்கு அந்த யோகம் அடித்​தது. மண்டல தலை​வர் பதவி​யா​வது கிடைக்​குமா என சந்​தேகத்​துடன் இருந்​தவ​ருக்கு மேயர் பதவியே கிடைத்​த​தில் மாவட்​டத்​தின் பொறுப்பு அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் ‘அனுகிரஹ​மும்’ உண்டு என்​பார்​கள்.

மேயர் பதவியை ஏற்​றுக் கொண்ட கல்​பனா தனது வார்டு மக்​களுக்கு எந்​தக் குறை​யும் இல்​லாமல் பார்த்​துக் கொண்​டார். அதேசம​யம், பக்​கத்து வீட்​டில் வசிப்​பவர்​களு​டன் தகராறு, மண்​டலத் தலை​வ​ருடன் மோதல் என சீக்​கிரமே சர்ச்​சைகளி​லும் சிக்​கி​னார் கல்​ப​னா. துறை அமைச்​ச​ரான கே.என்​.நேரு​விடமே முரண்​பட்​ட​வர், திமுக கவுன்​சிலர்​களை​யும் மதிக்​க​வில்லை என தலை​மைக்கு புகார்​களை தட்​டி​விட்​டார்​கள்.

குறிப்​பாக, செந்​தில்பாலாஜி சிறை சென்ற பிறகு கல்​ப​னா​வின் செயல்​பாடு​கள் முற்​றாக மாறிப் போன​தாகச் சொல்​கி​றார்​கள். இதனால் மக்​கள​வைத் தேர்​தல் முடிந்த கையோடு கல்​ப​னாவை மேயர் பதவியை ராஜி​னாமா செய்​யச் சொல்லி திமுக தலைமை நெருக்​கடி கொடுத்​தது. இதனால், மேயர் பதவியை ராஜி​னாமா செய்​தார் கல்​ப​னா.

மேயர் பதவியை ராஜி​னாமா செய்த பிறகு கல்​பனா தனது வார்டு பணி​களை மறந்தே போய்​விட்​ட​தாக புகார் வாசிக்​கி​றார்​கள். இதுதொடர்​பாக நம்​மிடம் பேசிய முன்​னாள் கவுன்​சிலரும், மணி​யாரன்​பாளை​யத்​தைச் சேர்ந்​தவ​ரு​மான கிருஷ்ண​சாமி, “சிறு தொழில் நிறு​வனங்​கள், பள்​ளி​கள் 19-வது வார்​டில் அதி​கம் உள்​ளது. இங்கு 60-க்​கும் மேற்​பட்ட லேஅவுட்​களில் சுமார் 4,500-க்​கும் மேற்​பட்ட வீடு​கள் உள்​ளன. வார்​டுக்​குள் அடிப்​படை பிரச்​சினை​கள் நிறைய உள்​ளன.

சாக்​கடைப் பிரச்​சினை, சாலை​கள் சீரமைப்​பு, பூங்​காக்​கள் பரா​மரிப்​பு, தெரு​விளக்கு பரா​மரிப்பு ஆகியவை முக்​கிய பிரச்​சினை​களாகும். பரா​மரிப்பு சரி​யாக இல்​லாத​தால் தண்​ணீர் சரிவர வரு​வ​தில்​லை. பாதாளச் சாக்​கடை பணி​களும் முழு​மை​யாக மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. இத்​தனை பிரச்​சினை​கள் இருந்​தா​லும் கவுன்​சில​ரான எக்ஸ் மேயர் கல்​பனா வார்டு பக்​கமே எட்​டிப் பார்ப்​ப​தில்​லை. மேயர் பதவியை துறந்த அவர், தனது வார்டு பணி​களை மறந்​து​விட்​டார். இங்கு அவர்​தான் ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை கொண்டு வந்​தார்.

குடிநீர் விநி​யோக பணி​களை செய்​தார். மற்ற எதை​யும் அவர் செய்​ய​வில்​லை. சாலை​கள், சாக்​கடைகளை புனரமைக்​கப்பட வேண்​டும். 45 வருடங்​களுக்கு முன்பு உரு​வான இளங்கோ நகரில் இன்​ன​மும் சாக்​கடை வசதி செய்து தரப்​பட​வில்​லை. திடக்​கழிவு மேலாண்மை பணி​யும் மோசம். ஆங்​காங்கே குப்​பைகள் தேங்​கிக் கிடப்​ப​தால் சுகா​தா​ரச் சீர்​கேடு ஏற்​படு​கிறது. தெரு​விளக்கு பரா​மரிப்​பும் மோசமா இருக்​கு” என்​றார்.

இதற்​கெல்​லாம் பதில் சொன்ன முன்​னாள் மேய​ரான கல்​பனா ஆனந்​தகு​மார், “இது தவறான குற்​றச்​சாட்​டு. மாதந்​தோறும் ரூ.5 லட்​சம் வார்டு நிதியை பயன்​படுத்​தி, திட்​டங்​களைச் செயல்படுத்தி வரு​கிறேன். தின​மும் வார்டு மக்​களை நேரில் சந்​தித்து குறை​களை கேட்டு சரிசெய்து வரு​கிறேன். ரூ.30 லட்​சம் மதிப்​பில் மழைநீர் வடி​கால் பணி, ரூ.40 லட்​சத்​தில் பூங்கா பரா​மரிப்​பு, ரூ.1 கோடி மதிப்​பில் பழுதடைந்த 28 சாலை​களை சீரமைக்க நடவடிக்​கை, ரூ.38 லட்​சத்​தில் மாநக​ராட்சி ஆரம்​பப் பள்​ளி​யில் மேம்​பாட்​டுப் பணி என எனது மக்​கள் பணியை தொய்​வின்றி செய்து வரு​கிறேன். பாதாளச் சாக்​கடை பணி​களும் எனது வார்​டில் நடந்து வரு​கிறது.

ஒரு பெண் பல தடைகளை தாண்​டி, அரசி​யலுக்கு வந்து மக்​கள் பணி செய்​தால், அதைப் பொறுத்​துக் கொள்ள முடி​யாதவர்​கள் நான் வார்​டுக்​குச் செல்​வ​தில்​லை, மக்​களைச் சந்​திப்​ப​தில்லை என தவறான குற்​றச்​சாட்​டு​களை தெரிவிக்​கின்​ற​னர். தொடர்ந்து எனக்கு தொந்​தரவு கொடுத்து வரு​கின்​ற​னர். இதுகுறித்து கட்​சித் தலை​மை​யிட​மும் நான் தெரி​வித்​துள்​ளேன். நாங்​கள் பரம்​பரை​யாக திமுக-​வில் இருப்​பவர்​கள். மேயர் பதவியி​லிருந்து வில​கி​னாலும் மக்​கள் பிர​தி​நி​தி​யாக எனது கடமையை தொய்​வின்றி செய்து வரு​கிறேன்” என்​றார். பின்ன எதுக்கு இவர பதவி விலகச் சொன்​னாங்​க..?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x