Published : 22 Apr 2025 09:22 PM
Last Updated : 22 Apr 2025 09:22 PM
கோவை: கோவை ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய ரயில் சேவைகளை தொடங்கவும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று (ஏப்.22) நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சரை இன்று நேரில் சந்தித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “தெற்கு ரயில்வேயில் வருவாய் ஈட்டும் முக்கிய ரயில் நிலையமாக கோவை திகழ்கிறது. இருப்பினும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.
மயிலாடுதுறை - தஞ்சாவூர் ரயில் சேவையை பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வரை நீட்டிக்க வேண்டும். இந்த திட்டம் ஏற்கெனவே ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதே போல, ஈரோடு - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவையை கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும்.
கோவை - பொள்ளாச்சி விரைவு ரயில் சேவை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் திருவனந்தபுரம் - கோவை இடையே எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு வழியாக புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும். நாகர்கோவில், கோவை, நாகர்கோவில் - பழநி இடையே ஜனசதாப்தி ரயில் சேவையை இயக்க வேண்டும். இது பழநி மற்றும் மதுரைக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோவை மாவட்ட மக்கள் தொகை 35 லட்சத்தை கடந்துள்ளதால், நகரின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய மூன்று ரயில் நிலையங்களை மேம்படுத்தி தர வேண்டும். கோவை வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் நடை மேடைகள் மற்றும் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சரக்கு முனையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். போத்தனூர் சந்திப்பில் ஏ.பி.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் தாமதமாவதால், பிட் லைன்கள் மற்றும் ஸ்டேபிளிங் லைன்களை விரைந்து அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், கோவை மக்களின் ரயில் பயணம் எளிதாகும்,” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT