Published : 21 Apr 2025 06:34 AM
Last Updated : 21 Apr 2025 06:34 AM
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.21) முதல் 26-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 5 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் உபாசி, கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 3 செ.மீ., நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, சேந்தமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், பெரியநாயக்கன் பாளையத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT