Published : 20 Apr 2025 03:45 PM
Last Updated : 20 Apr 2025 03:45 PM
சென்னை:பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று நம்புவதாக சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பேபி கூறுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் மிகப் பெரிய ஆதரவை அளித்துவருகிறார்கள்.
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு மக்களின் ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பின் போது, மதவாத சக்திகளுக்கு கடும் பதிலடி கொடுக்க ஜனநாயக மதச்சார்பற்ற, முற்போக்கு அரசியல் சக்திகளின் தலைமையில் தமிழக மக்களை ஒருங்கிணைத்துள்ளது குறித்தும், அதை வலுவாக கட்டியெழுப்புவதில் திமுகவின் பங்களிப்பு குறித்தும் பேசினோம்.
தற்போது, பாஜகவும் அதிமுகவும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன. பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் வழிகாட்டுதலின்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் உரிமை, ஜனநாயக உரிமைகளை திட்டமிட்டு சீர்குலைத்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். வக்பு திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது, சிறுபான்மையினர் உரிமைகள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணமாகும்.
நாடாளுமன்றத்தில் இந்த வக்பு மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களித்தது. அதேநேரத்தில், அவர்கள் பாஜக-வுடன் சேர்ந்தது சிறுபான்மையினருக்கு எதிரான செயலாகும். தற்போது உச்ச நீதிமன்றம் இந்த வக்பு சட்டத்தைப் பற்றி, கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளது. வக்பு சட்டத்தின் பல விதிகள் சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உத்திரவாதங்களுக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேபோல், உச்ச நீதிமன்றம் ஆளுநர் தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பினை சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்றுதந்த முதல்வருக்கு வாழ்த்துகள். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாநில அரசுகளின் உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இந்தச் சந்திப்பில் நாங்கள் நட்பு ரீதியாக விவாதித்தோம். இன்னும் ஒரு வருடத்திற்குள் சட்டப்பேரவைக்குத் தேர்தல் வரும் நிலையில் தமிழகத்தில் முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவெடுத்துள்ளோம். இந்த அணி ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கும். இதில் பலரும் சேர்ந்து மேலும் பலமாக இருக்கும்.
பாஜக-வுக்கும், அதிமுக-வுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால், மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும், வலுசேர்ப்பார்கள் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT