Published : 19 Apr 2025 06:30 AM
Last Updated : 19 Apr 2025 06:30 AM
சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவையை தெற்கு ரயி்ல்வே நிர்வாகம் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று தொடங்கி வைக்கிறது.
ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கடற்கரையில் இருந்து காலை 7, பிற்பகல் 3.45, இரவு 7.35 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரத்துக்கு காலை 7.42-க்கும், மாலை 4.26-க்கும், இரவு 8.30-க்கும் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு முதல் இரண்டு ரயில் சேவை மட்டும் செங்கல்பட்டுக்கு காலை 8.35-க்கும், மாலை 5.25-க்கும் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து காலை 9, மாலை 5.45-க்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு காலை 9.41-க்கும், மாலை 6.26-க்கும் வந்தடையும். பின்னர் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்கு காலை 10.30, இரவு 7.15-க்கும் வந்தடையும். இதேபோல தாம்பரத்தில் அதிகாலை 5.45-க்கு புறப்பட்டு காலை 6.45-க்கு கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.
இந்த ரயில் அதிகாலை, இரவு நேரங்களில் புறநகர் ரயில் பாதையிலும், மற்ற நேரங்களில் பிரதான மின்சார ரயில் பாதையிலும் இயக்கப்படும். பிரதான பாதையில் இயக்கப்படும்போது கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT