Published : 19 Apr 2025 06:19 AM
Last Updated : 19 Apr 2025 06:19 AM
’டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது’ என, பொன்னேரி அருகே ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தில் நேற்று காலை தமிழக அரசின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டும் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் ‘நவீன தமிழ்நாட்டின் சிற்பி’. அதற்கு அடையாளமாக விளங்குகின்ற இடம் திருவள்ளூர் மாவட்டமும், அதனுடைய சுற்றுப்புறங்களும். திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களுக்கும் பலப்பல திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி வழங்கி வருகிறது. ஏற்கனவே இருந்த அதிமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் பத்தாண்டுகளாக முடங்கிக் கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான எதிர்க்கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழகத்துக்கு எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகின்றன. அவர்கள் எண்ணம் என்ன? தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழகத்தையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது.
நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும், மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும், வக்ஃபு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படைகின்ற மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும் திமுகதான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மாநில உரிமையின் அகில இந்திய முகமாக திமுகதான் இருக்கிறது.
இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா?
மத்திய அரசு எதையும் செய்யாத காரணத்தால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுள்ளது. திமுகவின் ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது.
நீட் தேர்வில் விலக்கு தருவோம், இந்தியை திணிக்க மாட்டோம் என்றும், தமிழகத்துக்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என்றும், தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது என்றும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவால் சொல்லமுடியுமா?
ராமேஸ்வரத்துக்கு ரயில்வே பாலத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடி, ’எவ்வளவு நிதி கொடுத்தாலும் தமிழகத்தில் அழுகிறார்கள்’ என, பேசியுள்ளார். மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ’ மத்திய அரசு ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்று புகார் சொன்னார். இப்போது நாங்கள் நிதி கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை. நான் அழுது புலம்புவனும் இல்லை! ஊர்ந்து போய் யார் காலிலும் விழுகிறவனும் இல்லை.
உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று நமக்கு சொல்லிக் கொடுத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழித்தடத்தில் பயணிக்கின்றவன் நான்.
மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால் தான், மாநிலங்களில் மக்களுக்குத் தேவையானவற்றை செய்ய முடியும். மத்திய பாஜக அரசு எல்லா வகையிலேயும் தமிழக அரசுக்கு தடையை ஏற்படுத்துகிறது. எப்படியெல்லாம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதை செய்கிறது.
ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, மத்திய அரசே வெளியிடுகின்ற அனைத்து தர வரிசையிலும், அனைத்து புள்ளி விவரங்களிலும் தமிழ்நாடுதான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், தமிழக அரசின் திறமையான நிர்வாகம். இத்தனை இடர்பாடுகளை மத்திய பாஜக அரசு உருவாக்கும்போதே, தமிழக அரசு இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என்றால், தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால் தமிழக அரசால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும்.
மத்திய அரசு செய்யவில்லை என்றால், அவ்வரசு ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்.
அதுமட்டுமல்ல, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழகம் மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ’ 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம்’ என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழகத்துக்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள்.
மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி ஆட்சி அமைக்கின்ற பாஜகவின் ஃபார்முலா, தமிழகத்தில் வேலைக்கு ஆகாது. 2026-ல் திராவிட மாடல் ஆட்சி தான்.
ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காத மானமுள்ள மண் தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஓராண்டில் பாஜக எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் - இங்கே ஆள முடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை பாஜக திட்டம் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
மாநில சுயாட்சி ஏன் அவசியம்: ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால்தான், மக்களுக்கு தேவையானதை மாநில அரசுகள் செய்ய முடியும். மத்திய பாஜக அரசு எல்லா வகையிலும் தமிழக அரசுக்கு தடையை ஏற்படுத்துகிறது. எல்லா வகையிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்கிறது.
ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, மத்திய அரசே வெளியிடும் அனைத்து தரவரிசை, அனைத்துபுள்ளிவிவரங்களிலும் தமிழகம்தான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடிக்கிறது. இதற்கு காரணம், தமிழக அரசின் திறமையான நிர்வாகம். மத்திய பாஜக அரசு இத்தனை இடர்ப்பாடுகளை உருவாக்கும்போதே, தமிழக அரசு இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என்றால், தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால் தமிழக அரசால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும்.
தமிழகத்தில் உள்ள சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான எதிர்க்கட்சிகளாக செயல்படாமல், தமிழகத்துக்கு எதிரிக்கட்சிகள் போல செயல்படுகின்றன. தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்யக்கூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழகத்தையே அடகு வைக்கவேண்டும் என்பதுதான் அந்தசந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT