Published : 18 Apr 2025 09:40 AM
Last Updated : 18 Apr 2025 09:40 AM
2021-ல் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் என்டிஏ கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, அனைத்திலும் தோற்றது. 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வென்று அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை ஒதுக்கிவிட்டு தனித்துக் களம் கண்ட அதிமுக, மூன்றாமிடத்துக்குப் போனது. பாஜக-வை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்த நிலையில், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என புதுச்சேரி அதிமுக-வும் இத்தனை நாளும் வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் பாஜக-வுடன் கை கோத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பிடித்திருக்கிறது அதிமுக. பாஜக தயவுடன் புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தற்போது பாஜக-வுடன் அத்தனை சுமுகமான நட்புறவில் இல்லை. அதேசமயம், நடிகர் விஜய்யுடன் நட்பு பாராட்டும் அவர், அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சட்டப் பேரவையிலேயே புகழ்ந்து தள்ளினார். தங்களுக்குப் பிடிக்காத திமுக மற்றும் தவெக-வை ரங்கசாமி நேசப் பார்வை பார்ப்பது பாஜக வட்டாரத்தை பல்லைக் கடிக்க வைத்திருக்கிறது. ஆனபோதும் புதுச்சேரி பாஜக தலைவர்கள், “என்.ஆர்.காங்கிரஸுடன் தான் கூட்டணி” என அழுத்தமாகச் சொல்லி வருகிறார்கள்.
இதுகுறித்து பாஜக-வைச் சேர்ந்த் பேரவைத் தலைவர் செல்வத்திடம் கேட்டதற்கு, “புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி நிறுத்தப்படுவார்; வெற்றி பெறுவார். மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார்.
பாஜக தரப்பில் இப்படிச் சொன்னாலும் புதுச்சேரியில் என்டிஏ கூட்டணிக்கு தலைவராக இருக்கும் முதல்வர் ரங்கசாமி வாய் திறக்காமல் இருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதி முடிவு என்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ்காரர்கள். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத ரங்கசாமியோ, “தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி பேசுவோம்” என்கிறார்.
தமிழகத்தில் மீண்டும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பதால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் இல்லாவிட்டாலும் என்டிஏ கூட்டணியில் அதிமுக தொடர்வது உறுதியாகிவிட்டது. ஆனால், இந்த முடிவில் புதுச்சேரி அதிமுக-வினர் யாரும் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. 2021-ல், போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் தோற்ற அதிமுக-வுக்கு என்டிஏ-யில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற முறையில், வாரியத் தலைவர் பதவியையோ, நியமன எம்எல்ஏ பதவியையோ பெற்றுத் தர பாஜக முயற்சி எடுக்கவில்லை என்பதே அதிமுக-வினருக்கு இருக்கும் ஆகப்பெரும் ஆதங்கம்.
2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் அதிமுக தனித்து போட்டியிட்டபோது, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என பிரச்சாரம் செய்தார்கள். அதனால், “2026 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களது பலத்தைக் காட்டுவோம்” என புதுச்சேரி அதிமுக-வினர் மார்தட்டி நின்ற நிலையில், எதிர்பாராத திருப்பமாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இதை தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே புதுச்சேரி அதிமுக-வினர் கருதுகின்றனர்.
பாஜக கூட்டணியை ஏற்காமல் அதிமுக-வை விட்டு விலகிய முன்னாள் எம்எல்ஏ-வான அசனா, “பாஜக கூட்டணியால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம் என்பதால் தான் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என முடிவெடுக்கப்பட்டது. அதை மறந்துவிட்டு மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.
2026-ல் போட்டியிட திட்டமிட்டு தொகுதிக்குள் வேலை செய்து வந்த அதிமுக-வினர் பலரும் தற்போது, தங்களுக்கு போட்டியிட தொகுதி கிடைக்குமா... சிறுபான்மையினர் வாக்கு கிடைக்குமா என்றெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஏற்கெனவே கோஷ்டிகளால் கலகலத்துக் கிடக்கிறது புதுச்சேரி அதிமுக. இந்த நிலையில் மீண்டும் பாஜக கூட்டணிக்குள் வந்திருப்பதால் இம்முறையும் பேரவைக்குள் செல்லும் வாய்ப்பை இழந்துவிடுவோமோ என அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக-வின் அடிமட்டத் தொண்டர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT