Last Updated : 17 Apr, 2025 10:52 AM

 

Published : 17 Apr 2025 10:52 AM
Last Updated : 17 Apr 2025 10:52 AM

வேலுமணிக்கு ஷாக் கொடுத்த சந்திரசேகர்! - சொன்னதைச் செய்யத் தொடங்கிவிட்டாரா செந்தில் பாலாஜி?

சென்னையில் அமித் ஷா உடனான இரண்டாம் கட்ட சந்திப்புக்கு பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அவரது வலது கரமாக வலம் வந்த அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளரும் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான கோவை சந்திரசேகர் அதிமுக-விலிருந்து விலகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

சின்​ன​தாய் கட்​டு​மானப் பணி​களை செய்து வந்த சந்​திரசேகர், எஸ்​.பி.வேலுமணி​யின் அனுகிரகம் பெற்​றதும் அதி​முக ஆட்​சி​யில் 10 ஆண்டு காலம் கோவை மாநக​ராட்சி ஒப்​பந்​தப் பணி​களை எடுத்​துச் செய்​யும் நம்​பிக்​கை​யான ஒப்​பந்​த​தா​ர​ராக மாறிப்​போனார். கோயில் திருப்​பணி​கள், சொந்​தச் செல​வில் பொதுப்​பணி​கள் என கோவை வடவள்ளி தொடங்கி மருதமலை வரைக்​கும் அறியப்​பட்ட நபராக சந்​திரசேகர் வலம் வந்​தார்.

மாநக​ராட்சி தேர்​தலில் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி​யின் செல்​வாக்​கை​யும் மீறி தனது மனைவி சர்​மிளாவை கவுன்​சில​ராக ஜெயிக்க வைத்​தார். வடவள்ளி பேரூ​ராட்சி பகு​தி​யில் ஒரு காலத்​தில் திமுக தான் செல்​வாக்​காக இருந்​தது. அதை அதி​முக-வுக்கு சாதக​மாக திருப்​பிய​வர் சந்​திரசேகர். இந்த நிலை​யில், வேலுமணிக்கு எதி​ரான லஞ்ச ஒழிப்​புத் துறை​யினரின் ரெய்டு நடவடிக்​கை​களின் போது சந்​திரசேகருக்கு சொந்​த​மான இடங்​களும் தப்​ப​வில்​லை.

ஆனால், இது தொடர்​பான மேல் விசா​ரணை​களில் சந்​திரசேகர் தனித்​து​விடப்​பட்​ட​தாகச் சொல்​கி​றார்​கள். அத்​துடன் எஸ்​.பி.வேலுமணி​யின் சகோ​தரருடனும் கருத்​து ​வேறு​பாடு ஏற்​பட்​ட​தால் கட்​சி​யில் சந்​திரசேகருக்​கான முக்​கி​யத்​து​வம் குறைந்து போனது. அண்​மை​யில் நடை​பெற்ற வேலுமணி​யின் மகன் திருமண விழா​விலும் சந்​திரசேகருக்கு முக்​கி​யத்​து​வம் தரப்​பட​வில்​லை. இப்​படி​யான சூழலில் தான், கட்​சி​யை​விட்டு கனத்த இதயத்​துடன் வில​கு​வ​தாகச் சொல்லி இருக்​கி​றார் சந்​திரசேகர்.

இது குறித்து நம்​மிடம் பேசிய கோவை அதி​முக நிர்​வாகி​கள் சிலர், “எஸ்​.பி.வேலுமணி​யின் நம்​பிக்​கைக்கு பாத்​திர​மாக விளங்​கிய சந்​திரசேகர், 2021-ல் கோவை வடக்​கில் போட்​டி​யிட விரும்​பி​னார். ஆனால், கோவை தெற்கு பாஜக-வுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தால் கோவை வடக்கு தொகு​தியை மாநகர் மாவட்​டச் செய​லா​ள​ரான அம்​மன் அர்ச்​சுணனுக்கு தரவேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது.

இருந்த போதும் கோவை வடக்​கில் அம்​மன் அர்ச்​சுணனுக்​காக கடுமை​யாக உழைத்து அவரை ஜெயிக்க வைத்​தார் சந்​திரசேகர். அடுத்​து, 2024 மக்​கள​வைத் தேர்​தலில் சீட் கிடைக்​கும் என எதிர்​பார்த்​தார். அது​வும் கைவிட்​டுப் போனது. இப்​படி​யான சூழலில் வேலுமணி​யுட​னான உறவிலும் விரிசல் விழுந்து போன​தால் வில​கல் முடிவை எடுத்​திருக்​கி​றார்” என்​றார்​கள்.

கோவை திமுக நிர்​வாகி​களோ, “2021-ல் கோவை மாவட்​டத்​தில் 10 தொகு​தி​களை​யும் அதி​முக கூட்​டணி வென்​றது. இதில், கோவை வடக்​கு, தெற்​கு, கிணத்​துக்​கட​வு, பொள்​ளாச்​சி, மேட்​டுப்​பாளை​யம் ஆகிய 5 தொகு​தி​களில் சொற்ப வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் திமுக கூட்​டணி வாய்ப்பை இழந்​தது.

இம்​முறை அந்த ஐந்து தொகு​தி​களை​யா​வது வென்​றிட வேண்​டும் என திமுக தலைமை கணக்​குப் போடு​கிறது. அதற்​கான வேலை​களை அமைச்​சர் செந்​தில்பாலாஜி எப்​போதோ தொடங்​கி​விட்​டார். அந்த ஆட்​டத்​தில் தான் முதல் விக்​கெட்​டாக விழுந்​திருக்​கி​றார் சந்​திரசேகர்” என்று கண்​ணைச் சிமிட்​டு​கி​றார்​கள்.

எஸ்​.பி.வேலுமணி​யின் சொந்​தத் தொகு​தி​யான தொண்​டா​முத்​தூரில் அண்​மை​யில் நலத்​திட்ட உதவி​களை வழங்​கிப் பேசிய அமைச்​சர் செந்​தில்​பாலாஜி, “2026-ல் கோவை மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி​களி​லும் வெற்றி பெற வேண்​டும். குறிப்​பாக, தொண்​டா​ முத்​தூர் தொகு​தி​யில் அதிக வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற வேண்​டும்” என்று சூளுரைத்​துச் சென்​றார்.

தனது பேச்​சுக்கு செயல்​வடிவம் கொடுக்​கும் வித​மாக அவர் தான் சந்​திரசேகரை தன் பக்​கம் இழுத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். விரை​வில் திமுக-​வில் இணை​யப் போகும் சந்​திரசேகர் இம்​முறை கோவை வடக்​கில் திமுக வேட்​பாள​ராக களமிறங்​கி​னாலும் ஆச்​சரியமில்லை என்​கி​றார்​கள். அதி​முக-​வில் இருந்து வந்த கணபதி ராஜ்கு​மாரை கோவைக்கு எம்பி ஆக்​கிய செந்​தில்​பாலாஜி இதை​யும் செய்​தாலும் செய்​வார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x