Published : 16 Apr 2025 09:00 PM
Last Updated : 16 Apr 2025 09:00 PM
சென்னை: ‘கூட்டணி ஆட்சி இல்லை’ எனும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? என்பது குறித்து அமித் ஷா முடிவெடுப்பார்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் இன்று சென்னை - தி.நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். பாஜக தொண்டர்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி, பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கமலாலயத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அதன் பிறகு, கட்சி நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இமயமலையில் ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு, கமலாலயம் வந்த அண்ணாமலை, நயினார் நாகேந்திரனை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மாநில தலைவர் இருக்கையில் அமர்ந்து அதிகாரபூர்வமாக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இந்த ஆட்சியை அகற்றுவதற்கு மிகப் பெரிய எழுச்சி தெரிந்துக் கொண்டிருக்கிறது. அதற்கான விடிவு காலம் 2026-ல் வரும்.
பாஜகவில்தான் கிளை செயலாளரும் மாநில தலைவராக முடியும். மாநிலத் தலைவரும் தேசிய செயலாளராக முடியும். பாஜக குடும்ப கட்சி கிடையாது. அண்ணாமலை பாஜகவை கட்டுப்பாடுடன் வளர்த்தார். இப்போது, என்னை மாநில தலைவர் இருக்கையில் அமர வைத்து, அவரும் என்னுடனே இருக்கிறார். எனக்கு மூன்று ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் கழித்து புதியவர் மாநில தலைவராகலாம். ஆனால், திமுகவில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அடுத்து அவரது மகன் வருவார். பாஜகவில் தான் சமூக நீதி இருக்கிறது.
கூட்டணியை பற்றி பேசியது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். எனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து, அந்த நேரத்தில், அமித் ஷா முடிவெடுப்பார். அது பற்றி என்னால் கருத்து கூற முடியாது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மக்களுக்கு எதிரான இந்த ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அமித் ஷா அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். பாஜகவில் அண்ணாமலை புயலாக இருப்பார். நான் தென்றலாக இருப்பேன்” என்றார் நயினார் நாகேந்திரன்.
இபிஎஸ், அமித் ஷா சொன்னது என்ன? - முன்னதாக, சென்னையில் நடந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக - பாஜக கூட்டணி அரசு என்று சொன்னது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் கூட்டணி அரசு என்று சொல்லவே இல்லை. நீங்கள் தவறாக புரிந்துகொண்டு ஏதேதோ வித்தையெல்லாம் காட்டுகிறீர்கள். தயவுசெய்து இந்த வித்தையெல்லாம் விட்டுவிடுங்கள். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்று தான் கூறினார். அப்படியெல்லாம் (கூட்டணி அரசு ) அவர் சொல்லவே இல்லை. டெல்லிக்கு பிரதமர் மோடி என்றும், தமிழகத்துக்கு என்னுடைய பெயரை கூறினார். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக -பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி சென்னை வந்த அமித் ஷா, 11-ம் தேதி ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்புக்குப்பின், மாலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் அமித் ஷா, “சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை” என்றார்.
அந்த சந்தர்ப்பத்தில், கூட்டணிக்கு தலைமையேற்கும் பழனிசாமியோ, அவருடன் இருந்த எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி என யாரும் பேசவில்லை. இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்துக்கு வந்த பழனிசாமி, வெளிநடப்பு செய்த பின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கூட்டணி தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். அப்போது, “மத்திய அமைச்சர் அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று கூறினாரே தவிர, கூட்டணி அரசு என்று கூறவே இல்லை” என்று பழனிசாமி கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT