Published : 11 Apr 2025 05:26 PM
Last Updated : 11 Apr 2025 05:26 PM
புதுடெல்லி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அகில இந்திய அளவில் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் ஏற்பட உள்ள மாற்றம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி அண்ணாமலையின் பங்களிப்பு முன்னோடியில்லாதது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் ஒருங்கிணைப்பு செயல் திறன்களை பாஜக பயன்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல் இன்று (ஏப்.11) நடைபெற்றது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்திருந்தார். இதற்கான, விருப்பமனுக்களை இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தார். அவரைத் தவிர, மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விருப்பமனு அளிக்காததால், போட்டியின்றி அப்பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, தமிழக பாஜகவின் 13-வது மாநிலத் தலைவர் ஆகிறார் நயினார் நாகேந்தரன். இது குறித்து நாளை (ஏப்.12) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT