Published : 09 Apr 2025 04:35 AM
Last Updated : 09 Apr 2025 04:35 AM

ஆளுநர் விவகார தீர்ப்பு: அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதல்வர் கருத்து

சென்னை: ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துகட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரவையில் பேசிய முதல்வர் இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பெருமிதம் தெரிவித்தார்.

இதையடுத்து உறுப்​பினர்​கள் எஸ்​.பழனி நாடார் (காங்​கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வி.பி.​நாகை மாலி (மார்க்​சிஸ்ட்), ஜெ.​முகம்​மது ஷாந​வாஸ் (விசிக), தி.சதன் திரு​மலைக்​கு​மார் (மதி​முக), ஈ.ஆர்​.ஈஸ்​வரன் (கொமதேக), எம்​.எச்​. ஜ​வாஹிருல்லா (மமக) ஆகியோர் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை வரவேற்​றும், தமிழக அரசை​யும், முதல்​வரை​யும் பாராட்​டி​யும் பேசினர்.

சட்​டத்​துறை அமைச்​சர் எஸ்​.ரகுப​தி: அகில இந்​திய அரசி​யலுக்​கும், அரசி​ய​வா​தி​களுக்​கும், இந்​தி​யா​வில் உள்ள பல்​வேறு மாநிலங்​களுக்​கும் சிறப்பு சேர்க்​கும் வகை​யில், முதல்​வர் இந்த தீர்ப்பை பெற்று தந்​துள்​ளார். இது முதல்​வரின் முயற்​சிக்கு கிடைத்​துள்ள மிகப்​பெரிய வெற்​றி​யாகும். தமிழக அரசு இரண்​டாவது முறை​யாக நிறைவேற்றி அனுப்​பிய 10 சட்ட முன்​வடிவு​களை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் அனுப்​பியது செல்​லாது என உச்ச நீதி​மன்​றம் கூறியுள்ளது.

அமைச்​சர் துரை​முரு​கன்: வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்​து, இந்த பேர​வை​யில் அனை​வரும் பாராட்ட வேண்​டும் என்று நினைக்​கிறேன். முதல்​வரை இளம் வயதில் இருந்து தெரி​யும். மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் மடி​யில் நான் வளர்ந்​தவன். பொருளா​தார வளர்ச்​சி​யில் தமிழகம் மிகப்​பெரிய சாதனை படைத்​துள்​ளது. இது​வரை எந்த முதல்​வரும் செய்​யாத சாதனையை முதல்​வர் செய்​துள்​ளார்.

மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி, மாநில சுயாட்​சிக்கு அடிகோலி​னார். அவரது மகன் இன்​றைக்கு ஆளுநர் தேவை​யில்லை என்ற அளவுக்கு கொண்டு வந்​துள்​ளார். இங்​குள்ள ஆளுநரைப் பார்த்து தான் மற்ற ஆளுநர்​களுக்கு ஆணவம் வந்​தது.

பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு: அமைச்​சரவை எழு​திக் கொடுப்​பதை மட்​டும்​தான் சட்​டப்​பேர​வை​யில் வாசிக்​கும் உரிமை ஆளுநருக்கு உள்​ளது என்​ப​தை, இந்த சட்​டப்​பேர​வை​தான், இந்த முதல்​வர்​தான் இந்​தி​யா​வுக்கே வழி காட்​டி​னார். அதே​போல்​தான் இப்​போதும் உச்ச நீதி​மன்​றத்​தில் நீதியை முதல்​வர் பெற்று தந்​துள்​ளார்.

நாகப்​பட்​டினத்​தில் இயங்கி வரும் மீன்வள பல்​கலைக்​கழகத்​துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்​டும் என அதி​முக ஆட்சி காலத்​தில் தீர்​மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்​பப்​பட்டு கிடப்​பில் கிடந்​தது. மீண்​டும் இரண்​டாவது முறை​யாக இதே சட்​டப்​பேர​வை​யில் அந்த பல்​கலைக்​கழகத்​துக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்​டும் என்று மீண்​டும் தீர்​மானத்தை நிறைவேற்றி அனுப்​பியது இன்​றைய முதல்​வர்​தான். அதற்​குக்​கூட நன்றி சொல்ல அதி​முக தயக்​கம் காட்​டு​வது வேதனை​யான விஷ​யம்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: உச்ச நீதி​மன்ற தீர்ப்பை வரவேற்று நமது மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தி​யுள்​ளோம். அதே​போல், எதிர்க்​கட்​சி​யான அதி​முக மற்​றும் மத்​தி​யில் ஆட்சி செய்​கின்ற பாஜக ஆகிய இரண்டு கட்​சிகளை​யும் தவிர, மற்ற அனைத்​துக் கட்சி தலை​வர்​கள், உறுப்​பினர்​கள் பாராட்​டி​யும், வாழ்த்​தி​யும் பேசி அந்​தத் தீர்ப்​பினை வரவேற்​றுள்​ளனர்.

இந்​நேரத்​தில், நமது அரசமைப்பு சட்​டத்​தில் மாநில சட்​டப்​பேர​வை​களுக்கு அளிக்​கப்​பட்​டிருக்​கக் கூடிய உரிமை​களை நிலை​நாட்​டிய உச்ச நீதி​மன்​றத்​துக்​கு, தமிழக அரசு, அனைத்து சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் மற்​றும் தமிழக மக்​கள் சார்​பில் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். பேரவை முன்​னவர் துரை​முரு​கன் உருக்​கத்​தோடும், நெகிழ்ச்​சி​யோடும் பேசி​னார். கருணாநிதி மடி​யிலே நான் வளர்ந்​தவன் என்று அவர் சொன்​னார். நீங்​கள் சொன்​ன​போது, நான் எண்​ணி​யது, உங்​கள் மடி​யிலே நான். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

அதிமுகவை ‘ஆளுங்கட்சி’ என்ற முதல்வர்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய தீர்ப்பை வரவேற்று நம்முடைய மகிழ்ச்சியை, அனைத்து கட்சி, மன்னிக்கவும், ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து’’ என்று தவறுதலாக தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி என அப்பாவு மற்றும் திமுக உறுப்பினர்கள் கூறினர். தொடர்ந்து பேசிய முதல்வர், ‘‘பதற்றத்தில் இருக்கிறேன். அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன்’’ என்றார்.

மேலும், ‘‘கொள்கையிலே நிச்சயமாக, உறுதியாக இருப்பேன் என்கிற உறுதியோடு, இந்த மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களைத் தவிர, மற்ற அனைவரும் மேசையைத் தட்டி நம்முடைய நன்றியை தெரிவிக்க வேண்டுகிறேன்’’ என்றார். இதையடுத்து, உறுப்பினர்கள் மேசையை தட்டி நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x