Published : 04 Apr 2025 06:40 AM
Last Updated : 04 Apr 2025 06:40 AM
சென்னை: சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோடைகாலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. தர்பூசணி பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும்.
ரசாயனம் கலந்த தர்பூசணிதான் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி வெளியிட்ட விழிப்புணர்வு காணொலிதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தர்பூசணி பழங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால், அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதாகவும், சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி பழங்களை இப்போது ரூ.3 ஆயிரத்துக்கு கூட வாங்க யாரும் முன்வருவதில்லை.
அறுவடை செய்யப்பட்ட தர்பூசணி 5 நாட்களில் அடர்சிவப்பாக மாறிவிடும் என தோட்டக்கலை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் (அடர் சிவப்பு பழங்கள்) கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதேநேரம் சோதனையின்போது பல கடைகளில் கெட்டுபோன, எலி கடித்த, அழுகிப்போன பழங்கள் ஏராளமாகக் கிடைத்தன.
அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து அப்போதே அழித்துவிட்டோம். எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. தாராளமாக தர்பூசணி பழங்களை நம்பி வாங்கி சாப்பிடலாம். இயற்கையாகவே தர்பூசணிக்கு என ஒரு கலர் இருக்கிறது. ஆனால் இளம்சிவப்பு இல்லாமல், மிகவும் சிவப்பான கலரில் இருந்தாலோ, அல்லது சாப்பிடும்போது அதிகமாக சர்க்கரை போல இனித்தாலோ அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கும்.
ஒருசிலர் செய்யும் தவறு இது. இதைத்தான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். எனவே, மக்கள் குழப்பமடைய வேண்டாம். நாங்கள் விவசாயிகளுக்கு எதிரி அல்ல. சென்னையைப் பொறுத்தவரை தர்பூசணி பழங்கள் மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT