Published : 03 Apr 2025 08:09 PM
Last Updated : 03 Apr 2025 08:09 PM
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அந்நாட்டு மீன்வளத் துறை கடலில் மூழ்கடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 2024-ம் ஆண்டு வரையிலும் இலங்கை நீதிமன்றங்கள் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 180 படகுகளை நாட்டுடமையாக்கி உள்ளன. மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினால், சிறை தண்டனைக்கு பிறகும் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இவ்வாறு இலங்கை கைப்பற்றிய தமிழக மீனவர்களின் படகுகள் தலைமன்னார், காங்கேசன்துறை, காரைநகர், க்ராஞ்சி, மயிலிட்டி, கல்பிட்டி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த மீன்பிடி இறங்குதளங்களை பயன்படுத்தி வந்த இலங்கை மீனவர்கள், தங்கள் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தமிழக மீனவர்களின் படகுகள் ஆண்டுக்கணக்காக ஒரே இடத்தில் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை மாசடைவதுடன் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும், தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி சேதமடைந்து, படகுகளின் உள்ளே மழை நீரும், கடல் நீரும் உட்புகுந்த நிலையிலும் உள்ளன. இதில் அதிகம் சேதமடைந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க அந்நாட்டு மீன்வளத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீனவர்களின் படகுகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது படகுகளை கடலில் மூழ்கடிக்க முடிவு செய்துள்ளது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT