Last Updated : 17 Mar, 2025 06:02 PM

8  

Published : 17 Mar 2025 06:02 PM
Last Updated : 17 Mar 2025 06:02 PM

“2026 தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சிதான் அமையும்!” - அன்புமணி ராமதாஸ் கருத்து

திண்டிவனத்தில் நடந்த பாமக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் உரையாற்றினார். 

விழுப்புரம்: “தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சிதான் அமையும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனத்தில் இன்று (மார்ச் 17) வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11-ம் தேதி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது: “சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

பிரச்சினைகள் இல்லாமல் மாநாட்டினை நடத்த வேண்டும். பாமகவுக்கு யாரும் எதிரி கிடையாது. பாமக நிறுவனர் ராமதாஸ் அனைத்துச் சமுதாயத்துக்கும் சமமானவர். சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் கோயில் கும்பாபிஷேகம் போல் நடத்தப்பட வேண்டும். மாநாட்டு கூட்டத்தை கண்டு ஆளும்கட்சி பயப்பட வேண்டும். நமக்கான சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்” என்றார்

இதனை தொடர்ந்து ராமதாஸ் பேசும்போது, “அனைத்து மக்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சியாக பாமக உள்ளது. 18 சதவீத இடஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இப்போதுள்ள பட்டியலின தலைவர்களை கேட்டுக் கொள்வது என்னவெனில் நீங்களும் மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள். பட்டியல் சமூக தலைவர்கள் மாநாடு நடத்தினால் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் . அரசு, காவல் துறை வழிகாட்டுதலின் பேரில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி அவர்கள் பாராட்டும் அளவில் மாநாடு நடைபெறும். அண்ணா கூறியது போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.மாநாட்டுக்கு வரும் பட்டியல் சமூகத்தினரை வாழ்த்து சொல்லி அனுப்புங்கள்.

10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மட்டுமல்ல, சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்க கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. அத்தனை மக்களுக்காகவும் என்னை போல் பாடுபட்ட தலைவரை கூறுங்கள். ஆட்சியில் அமராமல் இந்த மக்களுக்கு, அவர்களின் பிரச்சினைகளுக்கு பாடுபட்டவர்களை சொல்ல முடியுமா?

இந்த மாநாடு 364 சமுதாயத்துக்கும் ஒரு செய்தியை சொல்லும். அவர்களுக்கு அரணாக இருக்கும். வன்னியர் மாநாட்டுக்கு நாம் எப்படி செல்வது என யோசிக்காதீர்கள். முடிந்த அளவு நீங்களும் வாருங்கள்,364 சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நீங்களும் கலந்து கொள்ளுங்கள். பல சமுதாய தலைவர்களை நாங்கள் அழைப்பதுண்டு. 1998-ல் மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியிருந்ததார். அரசுக்கும், காவல் துறைக்கும் வேண்டுகோளாக வைப்பது மாநாடு நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை.இப்படி ஒரு மாநாடு நடைபெற்றதில்லை என கூறும் அளவுக்கு நடத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சிவகுமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x