Published : 16 Mar 2025 09:23 AM
Last Updated : 16 Mar 2025 09:23 AM
மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசிவிடுபவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா. அதிலும், ஆளும் திமுக-வை தாக்குவதில் அண்ணாமலைக்கும் ஒருபடி மேல் என்று சொல்லலாம். அதிமுக - பாஜக கூட்டணி, மும்மொழிக் கொள்கை விவகாரம், விஜய் அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஹெச்.ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்? நிதி தரமாட்டேன் என்று சொல்வது எல்லாம் சர்வாதிகாரம் இல்லையா?
தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அம்சம்தான் மும்மொழிக் கொள்கை. தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை மறைப்பதற்காக மும்மொழிக் கொள்கை திட்ட எதிர்ப்பை திராவிடக் கும்பல் கையில் எடுத்துள்ளது. அதற்காக தமிழக மக்களை 1965, 1967-ம் ஆண்டு காலகட்ட மனநிலைக்கு கொண்டு போவதுதான் இவர்களது திட்டம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.300 கோடி ஊழல், டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல். இவற்றையெல்லாம் மறைப்பதற்காக தமிழக வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. மக்கள் விழித்துக் கொண்டுவிட்டனர்.
திமுக-காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மும்மொழிக் கொள்கை இருந்தது. அதாவது, 3-வது மொழியாக இந்தி அல்லது சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும். ஆனால், 2019-ல் பாஜக அரசு, கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைத்து, அதன் அறிக்கை அடிப்படையில் இந்தி, சம்ஸ்கிருதம் என்று இருந்ததை மாற்றி இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை 3-வது மொழியாகப் படிக்கலாம் என மாற்றினார்கள். பன்முகத்தன்மை பற்றி இவர்களுக்கு அக்கறை இருக்குமானால் இதனை வரவேற்றிருக்க வேண்டும்.
பிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான திட்டத்தில் சேர ஆர்வம் இருப்பதாக அப்போதைய தமிழக தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். அதன் கடைசி வரியில், 3, 4-வது தவணைத் தொகையை வழங்குங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கு மும்மொழிக் கொள்கை வேண்டாமென்றால் நீங்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்ட முதல் இரண்டு தவணைத் தொகைகளை (தலா ரூ.1,600 கோடி) திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த உறுதிமொழி அடிப்படையில்தான் 1 மற்றும் 2-வது தவணை தொகைகள் வழங்கப்பட்டது. இவர்களின் நேர்மையின்மை, இரட்டை வேடத்தை மாணவர்கள், பெற்றோர்கள் தெரிந்து கொண்டதால்தான் அவர்களை தூண்டிவிட முடியவில்லை. தமிழுக்காக உயிரைக் கொடுப்போம் என்று கூறுவதை மக்கள் இனி நம்பமாட்டார்கள்.
இந்தியை திணித்தால் தமிழகத்தின் தனிக் குணத்தைப் பார்ப்பீர்கள் என முதல்வரும், மொழிப் போருக்கு தமிழகம் தயாராக இருக்கிறது என்று துணை முதல்வரும் சொல்லி இருக்கிறார்களே..?
அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். திமுக-வின் ஊழல் ஆட்சியை ஒழிக்காமல் தமிழன் தலைநிமிர முடியாது. எந்த மாநிலத்திலும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறவில்லை. இங்குதான் நடந்துள்ளது. கலால் வரியில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளது.
மதுபான கொள்கை ஊழலைச் சொல்லி டெல்லியிலும் சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழகத்திலும் டாஸ்மாக் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருப்பதன் தொலைநோக்கம் அதுதானோ?
உறுதியான தகவல் இல்லாமல் அமலாக்கத் துறை சோதனை நடத்தாது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்ததால், இங்குள்ள துணை முதல்வருக்கு பயம் வந்துள்ளது. மதுபான கொள்கை ஊழலின் நூலைப் பிடித்து வந்தால் அது தமிழகத்தில் முடிவடையும். மணலில், டாஸ்மாக்கில் நடந்துள்ள ஊழல் மிக மோசமானது.
மாநில பாஜக தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா?
பாஜக-வில் பல்வேறு பொறுப்புகள் வகித்த நான், கட்சித் தலைமையிடம் பதவி, கட்சிப் பொறுப்பு, சீட் என எதையும் கேட்டது கிடையாது. அண்ணாமலை லண்டன் போனபோது, அமைப்பாளராக இருக்கச் சொன்னார்கள். அப்பணியை ஆற்றினேன். கட்சி தலைமை சொல்வதை செய்வது மட்டுமே எனது பழக்கம். ரேஸில் இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது.
தமிழக பாஜக தலைவர்கள் பலரும் ஆளுநர்களாக ஒரு ரவுண்டு வந்துவிட்டார்கள். அந்த வாய்ப்பு உங்களுக்கு ஏன் இன்னும் அமையவில்லை?
நான் அரசியலில் இருந்து வெளியே போக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு இன்னும் வயது இருக்கிறது. அண்ணன் இல.கணேசன் என்னைவிட 12 ஆண்டுகள் மூத்தவர்.
ஒரு காலத்தில் பாஜக-வையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சீமானுடன் பாஜக இப்போது கைகுலுக்கிக் கொண்டாடுகிறதே?
தமிழகத்தில் பெரியாரின் மோசமான பின்னணி பற்றி பேசிய முதல் அரசியல்வாதி நான்தான். பெரியாருக்கு எதிராக 20 ஆண்டுகளாக பேசி வருகிறேன். சீமான் இப்போதுதான் பேசுகிறார். சீமானுக்கு முன்னோடி நான்தான். அவர் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு இருக்கிறது.
பாஜக இல்லாமல் பழனிசாமியால் வெற்றிக் கூட்டணியை அமைக்க முடியும் என நினைக்கிறீர்களா?
அரசியல் சண்டைகளுக்கு அப்பாற்பட்டு, கொள்கைகளை தாண்டி, அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டுமானால், திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. தமிழகத்தில் பெரிய அளவில் போதைப் பொருள் புழக்கம் உள்ளது. போதை ஒழிப்பு மாநாட்டில் பேசிய ஆளுநர், “கஞ்சாவை பிடித்துள்ளீர்கள். சிந்தடிக் போதைப் பொருள் ஒரு கிராம் அளவிலாவது தமிழக காவல்துறை பிடித்துள்ளதா?” என்று கேட்டார். இதற்கு முதல்வரிடமிருந்து இதுவரை பதில் இல்லை. தமிழ்ச் சமுதாயமும், இளைஞர்களும் நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை நீக்கப்படும் என்கிறாரே அண்ணாமலை?
இதற்கு முன்னாடியே இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என நான் பேசியுள்ளேன். இந்துக்களுக்கு எதிரான அரசாக இருப்பதால் கோயில்கள் எப்படி மேம்படும். இந்து அல்லாதவர்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளாக இருப்பதால் அறம் கெட்ட துறையாக, இந்து அறத்தை அழிக்கும் துறையாகவே இருக்கிறது. எனவே, இத்துறையை தூக்கி எறிய வேண்டும் என அண்ணாமலை பேசியிருப்பது சரிதான்.
வேலுமணி, செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து பழனிசாமியை பணியவைக்க பார்க்கிறதா பாஜக?
கற்பனைக்கு பதில் சொல்ல முடியாது.
அதிமுக, பாஜக, நாதக, தவெக என திமுக-வுக்கு எதிரான கட்சிகள் எல்லாம் தனித்தனியாக நின்றால் அது திமுக-வுக்குத்தானே சாதகமாக அமையும்?
தமிழக வெற்றிக் கழகத்தால் திமுக கூட்டணிக்குத் தான் நஷ்டம். திமுக பேசும் விஷயங்களைத்தான் விஜய் பேசுகிறார். புதிதாக அரசியலுக்கு வந்தவர் புதிதாக எதையாவது செய்ய வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை. யார் அவருக்கு ஆலோசனை சொல்கிறார்களோ தெரியவில்லை... அதே பழைய பஞ்சாங்கம். ஈ.வெ.ரா. புராணம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என திமுக சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
தவெக-வால் திமுக கூட்டணிக்கு 8 முதல் 10 சதவீத வாக்குகள் பிரியும். விசிக-வுக்கு பெரிய பாதிப்பு இருக்கும். காங்கிரஸிடம் உள்ள கிறிஸ்துவ மத ரீதியான வாக்குகள் பிரியும். திமுக-வுக்கும் வாக்குகள் பிரியும். திமுக கூட்டணிக்கு பெரிய நஷ்டம் வரும் போது, அது எங்களுக்குச் சாதகமாக அமையும் என்பது எனது கணிப்பு.
நடிகர் விஜய்யிடம் சிந்தாந்த தெளிவு இல்லை. அதில் அவர் குழப்பமாகவே இருக்கிறார். எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிவிட முடியாது. விஜயகாந்தாலேயே முடியவில்லை. தலைசிறந்த நடிகரான சிவாஜிகணேசனும் அரசியலில் சாதிக்க முடியவில்லை. எனவே, சினிமா பிரபல்யத்தை மட்டும் வைத்துக் கொண்டு விஜய் வெற்றி பெற்றுவிட முடியாது. ஆனால், வரும் தேர்தலில் கணிசமான வாக்குகளை அவர் பிரிப்பார்.
பிரதமர் மோடி இந்தியை வளர்ப்பதை விட்டுவிட்டு, இந்தியாவை வளர்க்க முயற்சிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பற்றி..?
பாஜக ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி முதல்வருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறேன். 2014-ல் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் 11-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்தில் உள்ளது. பல்வேறு சர்வதேச நிதியகங்கள், நிதி அமைப்புகள் கணிப்பின்படி 2027-ம் ஆண்டு இந்தியா 3-வது இடத்துக்கு வரும். எனவே, முதல்வர் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வளர்ச்சியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த பாஜக-வும், இப்போது இலவசங்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டதே?
ஏற்கெனவே இருந்த அரசு செயல்படுத்திய இலவச திட்டங்களை நிறுத்தினால் மக்கள் ஏற்கமாட்டார்கள். அதனால்தான் நாங்களும் தொடர்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT