Published : 12 Mar 2025 09:57 AM
Last Updated : 12 Mar 2025 09:57 AM
இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் புதுச்சேரியில் காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் இடையில் அண்மைக்காலமாக உறவு அத்தனை சுமுகமாக இல்லை. அண்மையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா, “இனியும் ஓடாத வண்டியில் ஏறி பயணம் செய்ய திமுக தயாராய் இல்லை.
2026-ல் 20 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். தனித்து என்றால் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்” என்று காங்கிரஸை மறைமுகமாக சீண்டி இருந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான வைத்திலிங்கம் எம்பி-யிடம் பேசினோம். இனி அவரது பேட்டி..
20 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம், தனித்து என்றால் 30 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று திமுக திடீரென சொல்ல காரணம் என்ன?
நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்கிறோம். திமுக அவர்கள் கட்சியை வளர்க்கின்றனர். நாங்கள் 30 தொகுதிகளில் நிற்க விரும்பினால், அவர்களும் 30 இடங்களில் நிற்க விரும்புவார்கள். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. இரண்டு கட்சிகளும் வலுவாக இருந்தால்தான் தேர்தலைச் சந்திக்க முடியும். ஆகவே கட்சியை வலுப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், நாளைக்கே தேர்தல் வரப்போவதில்லை.
இப்போதைக்கு எங்களுடைய வேலை கட்சியை வளர்க்கும் பணிதான். அதன்படி நாங்கள் கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே 15 தொகுதிகளில் நிர்வாகிகள் கூட்டம் போட்டுள்ளோம். தொடர்ந்து கூட்டங்களை நடத்தி வருகின்றோம். பாதயாத்திரை, பொதுக்கூட்டம் போன்றவற்றையும் நடத்தி வருகிறோம்.
ஓடாத வண்டி என சிவா சுட்டிக்காட்டியது காங்கிரஸைத்தானா?
ஓடாத வண்டி என்று முதல்வர் ரங்கசாமியை சொல்லியிருக்கலாம். இந்த அரசாங்கத்தை நம்பி நம்மால் பயணம் செய்ய முடியாது. அவர்களை எதிர்த்துத்தான் நிற்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக இருக்கலாம்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கிறதா?
இரு கட்சிகளும் அவரவர் வேலைகளை பார்க்கிறோம். கட்சி மேலிடம் சொல்லும் பணிகளை செய்கிறோம். நாங்கள் கூட்டணி குறித்து சிந்திக்கவே இல்லை. தேர்தலைப் பற்றியும் பேசவே இல்லை. இண்டியா கூட்டணி சார்பில் ஏதேனும் அறிவுறுத்தல்கள் வந்தால் அந்த நேரத்தில், இண்டியா கூட்டணி கூட்டத்தை நடத்தி அதற்குண்டான நடவடிக்கையை எடுப்போம். அதுவரை எங்களுடைய பணிகளைச் செய்து கொண்டிருப்போம்.
2026-ல் எதனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உத்தேசம்?
நாளைய கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். அது நமக்கு தெரியாது. ஆகவே, 30 தொகுதிகளையும் வலுப்படுத்துகிறோம். தேர்தலில் காங்கிரஸ் நிற்கும் தொகுதிகள் வலுவாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கும் அது வலு சேர்க்கும். நம்முடைய நோக்கமே பாஜக கூட்டணி ஆட்சியை புதுச்சேரியில் இருந்து அகற்ற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது தான். அதற்கு உண்டான பணிகளை நாம் செய்து வருகின்றோம்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?
அவலத்தின் உச்சமாக இருக்கிறது ரங்கசாமி ஆட்சியின் நிர்வாகம். இங்கு பாஜக இரண்டு பிரிவாக உள்ளது. ஒன்று, ரங்கசாமி பாஜக, மற்றொன்று, மார்ட்டின் பாஜக. மோடி பாஜக இங்கு இல்லை. இதுகுறித்து நானும் நாராயணசாமியும் புதுச்சேரி மக்களுக்கு மேடை போட்டு எடுத்துச் சொல்லி வருகிறோம். மக்களும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியானது தேர்தலில் எத்தகைய தில்லு முல்லுகளைச் செய்யும் அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது குறித்தும் தொகுதி வாரியாக எங்கள் கட்சியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
மஹாராஷ்டிரா, ஹரியாணா, டெல்லி தேர்தல்களில் அரங்கேற்றிய முறைகேடுகளை கட்சியினருக்கு விரிவாக எடுத்துச் சொல்லி இங்கும் அதுபோன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT