Published : 11 Mar 2025 03:01 PM
Last Updated : 11 Mar 2025 03:01 PM

“எத்தனை கோடி கொடுத்தாலும் உங்கள் நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்” - முதல்வர் ஸ்டாலின்

செங்கல்பட்டில் நடந்த அரசு விழாவில் பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு: “நாடாளுமன்றத்தில், அதிமுக உறுப்பினர்கள் போல பாஜக அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல் தமிழகத்தின் உரிமைகளுக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் நிருபித்திருக்கிறார்கள். நாற்பது பேர் சென்று என்ன செய்வார்கள்? என்று கேட்டவர்களுக்கெல்லாம் நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இனி, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் ” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 11) செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில், செய்யூரில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், 10 லட்சம் கோடிக்கும் மேலாக, தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம், நம்முடைய ஆட்சியின் மீதான நம்பிக்கை. வறுமை இல்லை. பட்டினிச் சாவு இல்லை, என்ற நிலையில் திறமையான, வளமான, உண்மையான நிர்வாகத்தை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம். சில தடைகள் மட்டும் இல்லையென்றால், தமிழகத்தின் வளர்ச்சி இன்னும் வேகமாக வளர்ந்திருக்கும்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்துக்கு தரவேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாயை தருவோம் என்று திமிராக பேசுகிறார் யார்? மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். அவர்கள் தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் புகுத்துகின்ற கொள்கை என்னவென்று கேட்டால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியையே மொத்தமாக அழித்து, ஒழித்துவிடும் என்று தான் நாம் அதை எதிர்க்கிறோம்.

கல்விக்குள் மாணவர்களைக் கொண்டு வர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல்திட்டங்களும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. கல்வியை தனியார்மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியில் மதவாதத்தை புகுத்துவது, சிறிய பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு, கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு, கல்வியில் மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது.

இப்படி நிறைய இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம். ஆனால், “இதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் உங்கள் நிதி உங்கள் கைக்கு வரும்” என்று பிளாக்மெயில் செய்கிறார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். அதனால் தான் ஏற்கெனவே உறுதியாக சொன்னேன். திட்டவட்டமாக சொன்னேன். அழுத்தந்திருத்தமாக சொன்னேன். 2000 கோடி இல்லை, நீங்கள் 10 ஆயிரம் கோடி வழங்கினாலும், உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக நான் சொன்னேன். இந்த மேடையில் அதைத்தான் மறுபடியும் சொல்கிறேன். உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, தமிழகம் இவர்களின் சதிகளுக்கு எதிராக விடாமல் போராடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நேற்று நாடாளுமன்றத்தில், தர்மேந்திர பிரதான் என்ன பேசியிருக்கிறார் “தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், அராஜகவாதிகள் என்று” நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார். ஆனால் பேசிய அரைமணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள் நம்முடைய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய போர்க்குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

“மானம் அவன் கேட்ட தாலாட்டு - மரணம் அவன் ஆடிய விளையாட்டு” என்று எழுதினார் மறைந்த முதல்வர் கருணாநிதி. அந்தத் தலைவரின் வாரிசுகள் நாங்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் காட்டினார்கள். அதுமட்டுமல்ல, அதிமுக உறுப்பினர்கள் போல பாஜக அரசுக்கு லாலி பாடிக்கொண்டு இல்லாமல் தமிழகத்தின் உரிமைக்கு யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று நிருபித்திருக்கிறார்கள். நாற்பது பேர் சென்று என்ன செய்வார்கள்?” என்று கேட்டவர்களுக்கெல்லாம் நேற்று சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. இதே போர்க்குணத்துடன் தமிழகத்துக்காகப் போராடுவோம். இதே பொறுப்புணர்வுடன் மக்களாட்சியை நடத்துவோம். அதற்கு இப்போது போல் எப்போதும் மக்களான உங்களுடைய ஆதரவு தொடர வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x