Published : 11 Mar 2025 12:36 AM
Last Updated : 11 Mar 2025 12:36 AM
சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்.பி.க்கள் குறித்து பேசியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை: நாடாளுமன்றத்தில், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்களை அநாகரீகமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழக மக்கள் குறித்து தான் இவ்வகையில் பேசியுள்ளார். பாஜகவினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்.
பெ.சண்முகம்: தமிழ்நாட்டின் நிதி உரிமை, கல்வி உரிமையை மறுப்பதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். தமிழக எம்.பி.க்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அமைச்சர், தமிழக மக்கள் பிரதிநிதிகளை நாகரீகமற்றவர்கள் என்று ஆணவமாக பேசியுள்ளார். பலதரப்பு கண்டனத்துக்கு பிறகு இந்தப் பேச்சை அவர் திரும்பப் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் தனது ஆணவப் போக்குக்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT