Last Updated : 08 Mar, 2025 09:51 AM

5  

Published : 08 Mar 2025 09:51 AM
Last Updated : 08 Mar 2025 09:51 AM

அதிகரிக்கும் ஆதரவுக் குரல்கள்! - பாஜக கூட்டணிக்கு தயாராகிவிட்டதா அதிமுக?

பாஜக-வுக்கு மெத்த பிடித்தமானவராக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தவறாமல் கலந்து கொண்ட நிகழ்வை தொட்டு தமிழக அரசியலில் ஏகப்பட்ட திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

அண்ணா​மலைக்கும் அதிமுக-வுக்கும் இடையில் நடந்த வார்த்தை வீச்சு​களின் காரணமாக, 2024-ல் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது. மோடி, அமித் ஷா அழைத்துப் பேசிய பிறகும் கூட்டணி முறிவை மறுபரிசீலனை செய்ய மறுத்​து​விட்டார் இபிஎஸ். இந்த நிலையில் தான், மார்ச் 3-ம் தேதி கோவையில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி மகன் திருமணத்தில் கே.ஏ.செங்​கோட்​டையன், பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்​சர்​களுடன் வழக்கத்​துக்கு மீறிய நெருக்​கத்தைக் காட்டி குலைந்து பேசினார் அண்ணாமலை.

வேலுமணி​யும், இது அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா பாஜக முன்னாள் அமைச்சர் வீட்டு திருமணமா என்று வியக்​குமளவுக்கு பாஜக தலைவர்​களின் கூட்டத்தையே கூட்டி இருந்​தார். தேவையற்ற சங்கடங்களை தவிர்ப்​ப​தற்காக இந்த விழாவில் இபிஎஸ் பங்கேற்​க​வில்லை. ஆனபோதும், அவரது மனைவியும் மகனும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை அதிமுக சீனியர்கள் சிலர், “ஆரம்​பத்​தி​லிருந்தே எஸ்.பி.வேலுமணி பாஜக கூட்டணி தேவை என்ற மனநிலையில் தான் இருக்​கி​றார். இப்போது அவரோடு செங்கோட்​டையன், தங்கமணி ஆகியோரும் சேர்ந்​து​விட்​டார்கள். ஜெயக்​கு​மார், கே.பி.​முனுசாமி உள்ளிட்​ட​வர்கள் தவிர முன்னாள் அமைச்​சர்கள் பலரும் பாஜக தயவு தேவை என்பதில் தெளிவாக இருக்​கி​றார்கள்.

இத்தனைக்குப் பிறகும் பாஜக-வை பழனிசாமி ஒதுக்கித் தள்ளினால் அதன் பிறகு வேலுமணி வகையறாக்களை வைத்து பாஜக புது ஆட்டத்தைத் தொடங்​கலாம். இதையெல்லாம் தெரிந்துதான், “வாக்​குகள் சிதறாமல் இருக்க வேண்டும்... எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான்” என்றெல்லாம் பழனிசாமி இறங்கி வந்து பேச ஆரம்பித்​திருக்​கி​றார்” என்கி​றார்கள்.

இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலா​ளரும் முன்னாள் அமைச்​சருமான செ.ம.வேலு​சாமி​யிடம் கேட்டதற்கு, “எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண விழாவில் அண்ணா​மலைக்கு எவ்வித முக்கி​யத்​து​வமும் தரப்பட​வில்லை. அண்ணாமலை வரும்போது மேடையில் சீர் நடந்து கொண்டிருந்தது. அப்போது மேடைக்குக் கீழே அமர்ந்​திருந்த எங்களை நோக்கி வந்து அனைவரையும் பார்த்து பேசினார். அவராகவே நேரில் வந்து சந்தித்துப் பேசிச் சென்றார். பதிலுக்கு நாங்களும் மரியாதை நிமித்தமாக அவரை வரவேற்​றோம்.

மற்றபடி, நாங்கள் யாரும் அவரைச் சென்று சந்திக்​க​வில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்​ளார். தேர்தல் கூட்ட​ணி​யானது வேட்பாளர் அறிவிப்​புக்குப் பிறகுகூட முடிவாகலாம். கட்சி தலைமை என்ன முடிவெடுக்​கிறதோ அதை நிர்வாகிகள், தொண்டர்கள் பின்பற்​று​வார்கள்.

கொடிசி​யாவில் 10-ம் தேதி நடைபெறும் வேலுமணி வீட்டு திருமண வரவேற்பு விழாவில் பழனிசாமி கலந்து கொள்கி​றார். பொதுச்​செய​லாளர், ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்பது சிறப்பா அல்லது 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்பது சிறப்பா என்பதை நீங்களே சொல்லுங்கள்” என்றார்.

இதனிடையே, உள்ளுக்குள் என்னென்னவோ திட்டங்கள் இருந்​தாலும் பாஜக-​வினர் நடத்திய மும்மொழிக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்​திட்ட முன்னாள் எம்​எல்​ஏ-வான விஜயகுமாரை கட்​சியி​லிருந்து கட்டம் கட்டி சஸ்பென்ஸ் வைத்திருக்​கிறார் பழனி​சாமி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x