Published : 07 Mar 2025 03:54 PM
Last Updated : 07 Mar 2025 03:54 PM
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து 6 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2026-ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள மார்ச் 22-ம் தேதி அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2026-ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றினை கூட்டினார். அக்கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், முதல்வர் ஸ்டாலின், 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இன்று (மார்ச் 7) கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:
இந்திய மக்களாட்சி முறையின் சாராம்சம் அதன் கூட்டாட்சித் தன்மையில்தான் அமைந்துள்ளது. ஒரே நாடாக நமது மதிப்புறு ஒற்றுமையைப் போற்றும் அதேவேளையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் உரிமைக் குரலை எழுப்ப உதவிடும் ஒரு அமைப்பாகவும் மக்களாட்சி முறை உள்ளது. நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம்மைப்போன்ற மாநில அரசுகளின் உரிமையை நிரந்தரமாகக் குறைக்கக்கூடிய அச்சுறுத்தலை தற்போது நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், இன்று நான் அதுகுறித்து முக்கியமாக தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.
இந்தியாவில் 1952, 1963 மற்றும் 1973-ம் ஆண்டுகளில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. எனினும், 1976-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்காக 2000-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடித்ததால், 84-வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக 2026-க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை இது நீட்டிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாமதமானதால், தொகுதி மறுவரையறை - முதலில் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே நடைபெறக்கூடும் எனத் தற்போது தெரியவருகிறது. அதனால் மாநில நலன்களைப் பாதுகாக்க மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது. தொகுதி மறுவரையறை நடக்குமா? என்பதல்ல கேள்வி. ஆனால் அந்த மறுவரையறை எப்போது நடக்கும்?, அப்படி நடக்கும்போது, இந்திய நாட்டின் முன்னுரிமைத் திட்டங்களுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய மாநிலங்களின் செயலுக்கு மதிப்பளிக்கப்படுமா? என்பதுதான் கேள்வி.
2026-ம் ஆண்டுக்குப் பிறகு, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தற்போதுள்ள நிலை பாதிப்புக்குள்ளாகும். தங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிர்வாகக் குறியீடுகளை அடைந்த மாநிலங்கள் நாட்டின் கொள்கைகளை வரையறுக்கும். நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை எதிர்கொண்டு, நியாயமற்ற ஒரு தண்டனையைப் பெற நேரிடும். அவ்வாறு அது செயல்படுத்தப்பட்டுவிட்டால், அதனால் ஏற்படும் ஜனநாயக ஏற்றத்தாழ்வு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
இது நமது மாநில மக்களின் நலன்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதிடுவதற்கும், மாநிலத்துக்குரிய முக்கிய வளங்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முக்கியமான முடிவுகளில் நமது குரலை ஒலிக்கச் செய்வதற்குமுள்ள திறனைக் குறைத்துவிடும். நாங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவர்கள் அல்ல. தங்கள் தேசியக் கடமைகளை நிறைவேற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக இந்த தொகுதி மறுவரையறை அமைந்து அதன்மூலம், அம்மாநிலங்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்துவிடும் என்பதற்காகத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
தொகுதி மறுவரையறை செய்யும் முறை என்பது எளிமையானது. இரண்டு சாத்தியமான அணுகுமுறைகளுடன், மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முதல் நேர்வில், தற்போதுள்ள 543 இடங்களை மாநிலங்களுக்கு இடையே மறுபகிர்வு செய்யலாம். இரண்டாவது நேர்வில், மொத்த இடங்களின் எண்ணிக்கை 800-க்கு மேல் அதிகரிக்கப்படலாம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய அனைத்து மாநிலங்களும் 2026-க்குப் பிந்தைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும்.
மக்கள்தொகை பெருக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தியதற்காகவும், தேசிய வளர்ச்சி இலக்குகளை நிலைநிறுத்தியதற்காகவும் நம்மைப் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக்கூடாது. மேலும், இந்தப் பிரச்சினையின் தீவிரம் ஒருபுறம் இருக்க, இதுகுறித்து நம்முடைய கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு தெளிவையோ அல்லது உறுதிப்பாட்டையோ அளிக்கவில்லை. மத்திய அரசின் பிரதிநிதிகள் தெளிவற்ற முறையில் எல்லை நிர்ணயம் ஒரு “விகிதாச்சார சார்பு” அடிப்படையில், கணக்கீடு பயன்படுத்தப்படும்.
அதன் அடித்தளத்தை விளக்காமல், வெற்று வாய்ச்சொற்கள் மூலம் எந்த மாநிலமும் அதன் தொகுதிகளை இழக்காது என்று கூறுகின்றனர். நமது மக்களாட்சியின் அடித்தளமே ஆபத்தில் இருக்கும்போது, இதுபோன்ற தெளிவற்ற உத்தரவாதங்களை நாம் ஏற்கமுடியுமா? நமது மாநிலங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் போது, நம்முடன் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டாமா? இது தொடர்பாக, மார்ச் 5-ம் தேதி அன்று பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தான் ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னையில் நடத்தினேன்.
அக்கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்துக் கட்சிகளும் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை கோருவதிலும், நமது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஒன்றுபட்டிருந்தனர். தொகுதி மறுவரையறையின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டுடன், ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து, இந்தியா முழுவதும் இதே அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மாநிலங்களையும் அணுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினை தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்று தாம் நம்புகிறேன். கூட்டாட்சி கொள்கை என்ற நம்முடைய அடிப்படையான தத்துவத்தைப் பாதிப்படையச் செய்துவிடும். இந்தச் சூழலில், இப்பிரச்சினையின் அரசமைப்பு ரீதியான, சட்ட மற்றும் அரசியல் ரீதியான பரிமாணங்களை நாம் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும். நாடாளுமன்றத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் அதற்கான தீர்வுகளை நாம் இணைந்து அதற்காக ஒரு கூட்டு ஆலோசனை மற்றும் ஒருங்கிணைந்த விவாதங்கள் மூலம் மட்டுமே, சதவீத அடிப்படையில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை இழக்காமல் நாட்டின் முன்னேற்றத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பங்கை உறுதியளிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செயல்முறையைப் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக, பின்வரும் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன் :
மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக, மார்ச் 22-ம் தேதி அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த தாம் முன்மொழிகிறேன்.நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் தங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த முக்கியமான கொள்கைகளில் மாநிலத்தின் பங்களிப்பை அளிப்பதற்கும், நமது பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும். மார்ச் 22-ம் தேதி அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும், மேற்குறிப்பிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT