Published : 07 Mar 2025 01:38 PM
Last Updated : 07 Mar 2025 01:38 PM
சென்னை: “திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும் என்பதை நடைமுறை எதார்த்தத்துடன் கடைப்பிடித்து வருகிறோம்” என திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள 10-வது கடிதத்தின் விவரம்:
மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக் கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியைத் தரமாட்டோம் என வீண் பிடிவாதம் பிடிக்கிறது.
இந்திய ஒன்றியத்தில் இதற்கு முன் இருந்த பல ஆட்சியாளர்கள் இந்தித் திணிப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போதும் தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து நின்றது. இந்தியை நுழையச் செய்யும் கல்வித் திட்டங்கள்தான் ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டனவே தவிர, தமிழ்நாட்டின் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியை நிறுத்தவில்லை. தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய பங்கினை வட இந்திய மாநிலங்களுக்குப் பிரித்துத் தரவில்லை. பாஜக அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்தம் குடும்பத்தினர் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலை செய்திருக்கிறது.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “அரசமைப்புச் சட்டத்திற்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலான மும்மொழிப் பாடத்திட்டத்தை தமிழ்நாடு ஏற்க மறுப்பதால்தான் நிதி அளிக்கப்படவில்லை” என்று ஊடகங்களிடம் தெரிவித்தபோதே, “மும்மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டேன்.
ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களிடமிருந்து இதுவரை பதில் இல்லை. திமுக அரசு இந்திய அரசியல் சட்டத்தை மதித்து நடக்கிறது. ஒன்றிய பாஜக அரசு அந்த அரசியல் சட்டத்தையே சிதைக்கின்ற வேலையை செய்கிறது.
இந்தியாவின் ஆட்சி மொழி - அலுவல் மொழியாக இந்தியுடன், இணை ஆட்சிமொழியாக ஆங்கிலமும் இருப்பதால், இந்த நிலை நீடிக்க வேண்டும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தி பேசாத இந்திய மாநிலங்கள் அனைத்தின் தாய்மொழியையும் பாதுகாக்கின்ற வகையில், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் உத்தரவாதத்தைப் பெற்ற இயக்கமும் திமுக தான். ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்தித் திணிப்பு. அதை நேரடியாகச் சொன்னால் தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாது, மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்பதால்தான் மும்மொழிக் கொள்கையில் இந்தியை வலியுறுத்தவில்லை என்றும், ஏதேனும் ஒரு மொழியை படிக்கலாம் என்றும் பாஜக அரசு பசப்புகிறது.
‘இந்தி திவாஸ்’ கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு, இந்தியா முழுவதும் இந்தியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜகவினரும் தெரிவிக்கிறார்கள். இதன் உள்நோக்கத்தை தமிழ்நாடு உணர்ந்திருப்பதால்தான், இந்தி ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப் பழி நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆதிக்க மொழிகளை எதிர்க்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் கர்நாடகத்தில் இருக்கிறது. மராட்டியத்தில் இருக்கிறது. அந்தமான் - நிகோபார் தீவுகளில் கழகத்தினர் செயல்படுகிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள திமுக உடன்பிறப்புகள் கன்னடம், மராத்தி, இந்தி, வங்காளம் என அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழிகளையும், அங்கே பயன்படுத்தப்படும் மொழிகளையும் அறிந்திருக்கிறார்கள். திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்க்கும் என்பதை நடைமுறை எதார்த்தத்துடன் கடைப்பிடித்து வருகிறோம்.
அண்மைக்காலமாக, ‘இந்தி திவாஸ்’ கடைப்பிடிக்கப்படும் நாளில் மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அந்த மாநில மொழிப் பற்றாளர்கள், இந்தி ஆதிக்கத்திலிருந்து வங்காள மொழியை மீட்க வலியுறுத்தி பேரணிகளை நடத்துகிறார்கள். மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் படங்களுடன் இந்தி ஆதிக்கத்தை அன்றே உணர்ந்து - இன்றும் எதிர்ப்புணர்வு குறையாமல் செயல்பட்டு வரும் திராவிட இயக்கத் தலைவர்களின் படங்களையும் பேரணியில் உயர்த்திப் பிடித்துச் செல்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் அதன் தலைநகரான மும்பை தொடங்கி பல இடங்களிலும் இந்தி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தங்கள் தாய்மொழியான மராத்தியை மீட்டெடுக்கும் வகையில், அம்மாநிலத்தின் மொழி ஆர்வலர்கள் மட்டுமல்ல, மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தாய்மொழியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, தமிழ்நாடு போட்டுத் தந்த பாதையையே பல மாநிலங்களும் பின்பற்றுகிறன்றன. இந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதான்.
இந்தி பேசும் மாநிலங்களில் எத்தனை பேர் மும்மொழிப் பாடத்திட்டத்தில் பயின்று வருகின்றனர்? அவர்கள் படிக்கின்ற மூன்றாவது மொழி எது? இந்தியைத் தவிர இரண்டாவதாக ஒரு மொழியை சரிவரக் கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் எத்தனை உள்ளன? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான பதிலையும், உண்மையான புள்ளிவிவரங்களையும் அளித்துவிட்டு, தமிழ்நாட்டில் மூன்றாவது மொழித் திணிப்புக்கான நியாயமான காரணத்தை ஒன்றிய பாஜக அரசு சொல்லட்டும்.
மூன்றாவது மொழி என்ற சுமையை ஏற்றாமல் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளித்து வருகிறது திராவிட மாடல் அரசு. கால் நூற்றாண்டுக்கு முன்பே அரசுப் பள்ளிகளில் கணினி வகுப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு உலக நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு அதனைக் கையாள்கிறார்கள். விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துகிறார்கள். கலை - இலக்கியம் சார்ந்த பங்களிப்பினைச் செய்கிறார்கள். பன்முக ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள். அதனால் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்று, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர் பொறுப்புகளைப் பெற்று தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் பெருமை சேர்க்கிறார்கள்.
தமிழ்நாட்டு மாணவர்களின் பெருமை மீது பொறாமை கொண்டுதான் பாஜக வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏறத்தாழ 60 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்தளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்கு குறைவாக இருக்கிறார்கள்? உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எந்த மாநிலத்தைவிட பின்தங்கியிருக்கிறார்கள்?
இதே வாதங்களை இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆங்கில சேனலின் நெறியாளரிடம் இருமொழிக் கொள்கையில் படித்து உலக நாடுகள் எல்லாம் தன் திறமையை நிரூபித்து வரும் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வைத்தார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியையும் திறன் மேம்பாட்டையும் ஒன்றிய பாஜக அரசின் அறிக்கைகளே பாராட்டுகின்றன. இதன்பிறகும், மூன்றாவது மொழியைத் தமிழ்நாட்டின் மீது திணிக்க முயற்சிப்பதும், இந்த வல்லாதிக்கப் போக்கை ஏற்க மறுத்தால் நிதி தர முடியாது என மறுப்பதும் தமிழர்கள் மீது பாஜக அரசு திட்டமிட்டு நடத்துகின்ற தாக்குதலாகும்.
இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டு, ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களைத் தமிழ்நாட்டு மக்களிடம் முழுமையாக அம்பலப்படுத்தும் வலிமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம். ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து, அன்னைத் தமிழைக் காத்திட சூளுரைத்துள்ள திமுகவுடன் தோழமைக் கட்சியினர் முழுமையாக இணைந்து நிற்கின்றனர். அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்ட பல கட்சிகளும் மும்மொழித் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் அந்தக் கட்சிகள் அனைத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழையும் பிற மாநிலத்தவர்களின் தாய்மொழியையும் மதிக்காமல் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் மொழித் திணிப்பை வலியுறுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரை நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி வகுத்து தந்த ஐம்பெரும் முழக்கங்களின் வழிநின்று உரிமைக் குரலை எழுப்புகிறது. அண்ணா வழியில் அயராது உழைத்து, ஆதிக்கமற்ற சமுதாயம் அமைந்திட வேண்டுமென்றால், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து நிற்போம். தாய்மொழியைக் காத்திடும் அந்த அறப்போரில் வன்முறை தவிர்ப்போம். வளமும் வளர்ச்சியும் இணைந்திட வறுமையை வெல்வோம். உரிமைகளை நிலைநிறுத்திடும் வகையில், மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்ற நிலையை அடைந்திட பாடுபடுவோம்.
இந்தியாவின் மூத்த மொழி என ஆய்வுகள் மூலமாகவும் அறிவியல் பூர்வமாகவும் மெய்ப்பிக்க பட்டிருக்கின்றது நம் தமிழ் மொழி. இந்திய அரசின் செம்மொழித் தகுதி பெற்ற முதல் மொழி என்ற பெருமையைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. 14 வயதிலேயே தமிழ்க் கொடிப் பிடித்து இந்தி ஆதிக்கத்தை எதிர்த்தவரும், தமிழ் மொழி காத்திட, உயிருக்கு அஞ்சாமல் தண்டவாளத்தில் தலை வைத்து ரயிலை மறித்தவருமான அவர், “செம்மொழித் தமிழை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்கிடுக” என்று முழங்கியவர்.
தமிழுக்காக மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக்கிட அவர் குரல் கொடுத்தவர். அத்தனை மொழிகளையும் ஒரே நேரத்தில் ஆட்சிமொழியாக்குவதில் நிர்வாகச் சிக்கல் ஏற்படுமென்றால், எல்லாத் தகுதிகளையும் பெற்ற மூத்த மொழியான தமிழை உடனடியாக ஆட்சிமொழியாக்கிட வலியுறுத்தினார்.
அறிவியல் முன்னேற்றத்தினாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் நிர்வாகச் சிக்கல்களை இன்றையச் சூழலில் எளிதாகக் களைந்துவிட முடியுமென்பதால், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கையாகும். ஒவ்வொரு மாநிலத்தின் மீதும் ஆதிக்க மொழித் திணிப்பை நடத்தாமல், ஒவ்வொரு மாநில மொழியையும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாக அறிவிப்பதே சமத்துவமிக்க ஜனநாயக முறையாகும். மொழி சமத்துவத்தின் முதன்மைக் குரலாக திமுக ஒலிக்கும்.
மாநில உரிமைகளைப் பறிப்பதையே மறைமுகக் கொள்கைத் திட்டமாக கொண்டுள்ள ஒன்றிய பாஜக அரசு, தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைத்திடத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு எதிரான முதல் முழக்கத்தை எழுப்பியிருக்கிறது திராவிட மாடல் அரசு.
இது தனிப்பட்ட திமுகவின் பிரச்சினையல்ல என்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, தமிழ்நாட்டின் உரிமையைத் தக்க வைக்கவும், தென்மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையைப் பாதுகாத்திடவும் முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம், மாநில உரிமைக் குரலை நசுக்கிவிட நினைக்கும் பாஜகவின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில், மக்கள் திரள் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டாலும் அதையும் திமுக முன்னெடுக்கும். அதில் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும்.
நாடாளுமன்றத் தொகுதிக் குறைப்பு - ஆதிக்க மொழித் திணிப்பு எனும் இரண்டு அபாயங்களை ஒருசேர செயல்படுத்தி, மாநில உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் உடன்பிறப்புகளுடன், உங்களில் ஒருவனான நான் முதல் ஆளாக நிற்பேன். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT