Published : 06 Mar 2025 02:44 PM
Last Updated : 06 Mar 2025 02:44 PM
விருதுநகர்: விருதுநகரில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்திய அதிமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் சீனிவாசன், செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சரும் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான மாபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுக் கூட்டத்தின் தொடக்கத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினர். அப்போது, கட்சி நிர்வாகிகள் பலரும் மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாபா.பாண்டியராஜன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்க வந்தனர்.
அப்போது, விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் (52) பொன்னாடை அணிவிக்க வந்தார். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு, அருகே அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜனுக்கும் பொன்னாடை அணிவிக்க அவர் அருகில் சென்றார். அப்போது, திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி "யார் மாவட்டச் செயலாளர் எனத் தெரியாது" என கேட்டவாறு நந்தகுமார் கன்னத்தில் அறைந்தார். இதனால் மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுக் கூட்ட மேடையில் கட்சி நிர்வாகி ஒருவரை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் விருதுநகரில் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT