Published : 03 Mar 2025 06:10 AM
Last Updated : 03 Mar 2025 06:10 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை - கூடூர், அரக்கோணம் - ஜோலார்பேட்டை மற்றும் சேலம் - கோவை ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைத்தல், வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்த வழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரித்து, இயக்க அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில்,தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை - அரக்கோணம் - ஜோலார்பேட்டை உள்பட ஆகிய வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மணிக்கு 130 கி.மீ. வரையிலான வேகத்தில் இயக்க அனுமதிப்பட்டுள்ளது இதுதவிர, பல வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் உட்பட அனைத்து விரைவு ரயில்களின் வேகத்தையும் படிப்படியாக அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகளையும் பல்வேறு இடங்களில் தொடங்கி உள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு - மைசூரு மற்றும் சென்ட்ரல் - கோவை, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி உட்பட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வகை ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், தற்போது மணிக்கு 110 முதல் 130 வேகத்திலேயே இயக்கப்படுகிறது. இந்த தடத்தில் செல்லும் மற்ற ரயில்களும் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில்தான் இயக்கப்படுகின்றன. எனவே, வந்தே பாரத் ரயில் உட்பட அனைத்து விரைவு ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே விதிப்படி குரூப் ஏ வழித்தடத்தில் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை – கூடூர், அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சேலம் - கோவை வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகளைத் தொடங்கி உள்ளோம்.
அதிக வளைவுகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து நீக்குவது, பழைய மேம்பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்னல் தொழில்நுட்பம் மேம்பாட்டுப் பணிகளும், மின்சாரம் விநியோகம் செய்யும் திறன்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனைத்து கட்டமைப்பு பணிகளையும் முடிக்க 3 ஆண்டுகள் வரை ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT