Published : 03 Mar 2025 12:56 AM
Last Updated : 03 Mar 2025 12:56 AM
தொகுதி மறுசீரமைப்பு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் என யாரும் எதுவும் சொல்லாதபோது, அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவது மோசடியானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இல்லாத பிரச்சினையை, கற்பனையாக மக்களிடையே புகுத்தி, மாநிலத்தை எப்போதும் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் என யாரும் சொல்லாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குரித்து முதல்வர் பேசுவது மோசடியான செயல். எதற்கெடுத்தாலும் சர்வகட்சிக் கூட்டம், சமபந்தி போஜனம் என முதல்வர் ஸ்டாலின் நடத்துவது ஏன்? மக்களை திசை திருப்பும் செயலை கண்டிக்கிறேன்.
முதல்வருக்கு தமிழ்மொழிப் பற்று இருக்குமானால், அவரது குடும்பத்தினரால் நடத்தப்படும் பள்ளியை, சமச்சீர் பள்ளியாக மாற்ற வேண்டும். சீமான் வீட்டு பாதுகாவலர் கைது செய்யப்பட்டதில், போலீஸாரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெரியார் குறித்த சீமானின் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாமல், அவரை கொடுமைப்படுத்துகிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீதி போதனை வகுப்பை நீக்கிவிட்டார்கள். 1967-ல் இருந்து சமூக நன்னடத்தை கெட்டுப் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT