Published : 01 Mar 2025 05:05 PM
Last Updated : 01 Mar 2025 05:05 PM

பாமக வேளாண் நிழல் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மணல் குவாரிகள் மூடல் முதல் நெல் தொழில்நுட்ப பூங்கா வரை

சென்னையில் பாமக சார்பில் வேளாண் நிழல் நிதி அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.

சென்னை: பாமக சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 1) வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:

> அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.

> அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும்.

> காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயிக்கப்படும்.

> நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.

> 30,000 காவிரி பல்பொருள் அங்காடிகளை நிர்வகிக்க ஒரு லட்சம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

> தமிழகத்தின் சாகுபடி பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கப்படும்.

> தமிழகத்தில் கடந்த சில பத்தாண்டுகளில் 15,000 ஏரிகள் காணாமல் போய்விட்டன. 27,000 ஏரிகளின் கொள்ளளவு ஆக்கிரமிப்பால் குறைந்துவிட்டது. காணாமல்போன ஏரிகளில் சாத்தியமானவற்றை மீட்டெடுக்கவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்டெடுக்கவும் ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.

> விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம், முடங்கும் அளவுக்கு காயமடைவோருக்கு ரூ.15 லட்சம், லேசான காயமடைவோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

> தமிழகத்தில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு நியாயமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கும்.

> இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்க நிலையான நிவாரணத் திட்டம் வகுக்கப்படும்.

> காவிரி டெல்டா மாவட்டங்களில் சராசரி உற்பத்தித் திறன் 5 டன்னாகவும், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 7 டன்னாகவும் உயர்த்தப்படும்.

> மத்திய அரசால் வழங்கப்படும் உழவர் மூலதன மானிய திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 37.81 லட்சமாக குறைந்துவிட்டது. இதை 60 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

> காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

> காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.

> என்எல்சி 3-வது சுரங்கம் திட்டம், முதல் இரு சுரங்கங்களை விரிவாக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு தடைவிதிக்கப்படும். இதற்காக 25,000 ஏக்கர் நிலம் எடுக்க அனுமதிக்கப்படாது.

> செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக மேல்மா உள்ளிட்ட கிராமங்களில் 3,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்படும். அரசு நிலங்களில் இந்த விரிவாக்கம் செய்யப்படும்.

> சிப்காட் உள்ளிட்ட எந்த தொழில் திட்டத்துக்கும் வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாது.

> சென்னை அருகே அறிவு நகரம் அமைக்க 870 ஏக்கர் நிலம் எடுக்கும் திட்டம் கைவிடப்படும்.

> கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கப்படும்.

> இந்தியாவில் ஒட்டுமொத்தமாக காய்கறி பயிரிடப்படும் பரப்பில் 3.36%, பழங்கள் பயிரிடப்படும் பரப்பில் 4.59% மட்டுமே தமிழகத்தில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பரப்பை 50% அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உழவர்களின் வருமானம் உயரும்.

> மதுராந்தகம் ஏரியை ரூ.120 கோடியில் தூர்வாரி சீரமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்.

> தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.20,000 கோடி மதிப்பில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாசனப் பரப்பை 40 லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் நோக்குடன் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

> தமிழகத்தில் 25 இடங்களில் மணல் குவாரிகளும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. உழவுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்படும்.

> தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். கோவையில் ஏற்கெனவே வேளாண் பல்கலைக் கழகம் உள்ள நிலையில், தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய நகரங்களில் புதியப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும்.

> தஞ்சாவூரில் நெல் உற்பத்தியைப் பெருக்க நெல் தொழில்நுட்பப் பூங்கா (Rice Technology Park) அமைக்கப்படும். இதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.

> கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது மாறாக, 10% மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் பெறும் விவசாயி, ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.

> எருமை வகைகளில் அதிகப்படியாக பால் கொடுக்கும் முர்ரா வகை இனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உழவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் பால் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்காக்கப்படும்.

> மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும் என்பது உள்ளிட்ட 115 திட்ட அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x