Last Updated : 01 Mar, 2025 12:55 PM

4  

Published : 01 Mar 2025 12:55 PM
Last Updated : 01 Mar 2025 12:55 PM

கச்சத்தீவு மீண்டும் நம் கைவசமாகும்..! - நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி மீட்கக் கோரிக்கை

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 24-ம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது வரலாற்றுப் பிழை. அதை திரும்பப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என மீனவ பிரதிநிதிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

கச்​சத்​தீவை இலங்​கைக்கு தாரை​வார்த்​த​தால் கடந்த 50 ஆண்டு​களுக்​கும் மேலாக தமிழக மீனவர்கள் சொல்​ல​முடியாத இன்னல்களை அனுப​வித்து வருகின்​றனர். இங்கிருக்​கும் அரசியல் கட்சிகளோ தேர்தல் வாக்​குறு​தி​யில் சேர்க்​கும் அம்ச​மாகவே கச்சத்​தீவு விவகாரத்​தைக் கணக்​கில் வைத்​திருக்​கின்றன.

இந்த நிலை​யில், அண்மைக்​காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்​படை​யும் இலங்கை அரசும் நடத்​தும் விதம் வேறு மாதிரியாக இருக்​கிறது. எல்லை தாண்டி பிடிபடும் மீனவர்​களுக்கான தண்டனையை​யும், அபராதத்​தை​யும் கடுமை​யாக்கி இருக்​கிறது இலங்கை. இது தமிழக மீனவர்களை மேலும் தகிக்க வைத்​திருக்​கிறது.

நல்லதம்பி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தங்கச்​சிமடத்​தைச் சேர்ந்த தேசிய பாரம்​பரிய மீனவர் கூட்​டமைப்பு தலைவர் நல்லதம்பி, “1974-ல் கச்சத்​தீவை இலங்​கைக்கு தாரை வார்த்தது முதலே நமக்​குப் பிரச்​சினை​தான். 1983-ல் இலங்கை இனக்​கல​வரம் வெடித்த பிறகு நமது மீனவர்களை நோக்கி இலங்​கைக் கடற்படை துப்​பாக்​கிகளை திருப்​பியது. இதுவரை நமது மீனவர்கள் சுமார் 500-க்​கும் மேற்​பட்​ட​வர்கள் சுட்டுக் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஆயிரக் கணக்​கில் அங்கஹீனம் ஆகிக் கிடக்​கிறார்​கள். சுமார் 700 விசைப்​படகுகள் உள்ளிட்ட மீனவர்​களின் சொத்துகள் பறிபோ​யிருக்​கின்றன.

பாக் நீரிணை​யானது 7 மாவட்​டங்​களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மீனவர்​களின் வாழ்​வா​தா​ர​மாகும். இந்திய - இலங்​கைக்கு இடையிலான இந்த பாக்நீரிணை​யானது. 10,500 சதுர கிலோ மீட்டர் கொண்ட கடல் பிராந்​தி​ய​மாகும். கச்சத் தீவை தூக்​கிக் கொடுத்​த​தால் இதில் 3,000 சதுர கிலோ மீட்டர் மட்டுமே இப்போது நம்மிடம் உள்ளது. இதனால் பாக் நீரிணை பகுதியை நம்பி இருக்​கும் தமிழக மீனவர்​களின் வாழ்​வா​ தாரமே கேள்விக் குறி​யாகி அவர்கள் இன்றள​வும் வணிக கூலிகளாகவே உள்ளனர்.

கச்சத் தீவு ஒப்பந்​தத்​தின் ஆறாவது ஷரத்​தில் இலங்​கைக்கு கொடுக்​கப்​பட்ட கச்சத்​தீவு பகுதி​யில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்​கும் உரிமையை கொடுக்​கும் ஷரத்து சேர்க்​கப்​பட்​டுள்​ளது. ஆனபோதும் நம்மிலும் சிறிய நாடான இலங்​கை​யிடம் பேசி அந்த உரிமையை நிலை​நாட்ட மத்தி​யில் ஆளும் அரசுகள் அக்கறை காட்​ட​வில்லை. அந்த விதத்​தில் அனைத்​துக் கட்சிகளுமே தமிழக மீனவர்களை முதுகில் குத்திய துரோகிகள் தான்.

போதாதுக்கு, கச்சத்தீவை இலங்​கைக்கு கொடுத்தது ராஜதந்​திரம் என்கிறார் செல்​வப்​பெருந்​தகை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்​கிறோம். இது ராஜதந்​திரம் அல்ல; வரலாற்றுப் பிழை. 1960-ல் கிழக்கு பாகிஸ்​தான் என அழைக்​கப்​படும் பங்களாதேஷிடம் இருந்த பெரு​பாரி தீவை அது இந்தியா​வுக்​குச் சொந்​த​மானது என அப்போதைய மேற்​கு​வங்க முதல்வர் வி.சி.​ராய், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்து போராடி அதை மேற்கு வங்கத்​துடன் இணைத்த வரலாறுகள் உள்ளன. அதைப் போல கச்சதீவை​யும் மீட்பது சாத்​தி​யமே.

மீனவர்​களுக்கு நீங்கள் நல்லது செய்ய விரும்​பி​னால், அரசி​யலுக்கு அப்பாற்​பட்டு, விருப்பு வெறுப்​பின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து குரல்​கொடுத்து போராடி நாடாளு​மன்​றத்​தில் சட்டம் இயற்றி கச்சத்​தீவை மீட்க ஆவன செய்​யுங்​கள். அல்லது குறைந்​த​பட்​சம், 6-வது ஷரத்​தில் தெரி​வித்​துள்ளபடி கச்சத்​தீவு பகுதி​யில் நமது மீனவர்​களுக்கான மீன்​பிடி உரிமை​யை​யாவது நிலை​நாட்டுங்​கள்” என்​றார்​. இன்​னும்​ எத்​தனை ​நாளைக்​குத்​ ​தான்​ தமிழக மீனவர்​களை கண்​ணீரில்​ மிதக்​க​விட்​டு வேடிக்கை ​பார்​க்​கப்​ ​போகிறது இந்​திய அரசு?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x