Published : 28 Feb 2025 10:08 PM
Last Updated : 28 Feb 2025 10:08 PM
சென்னை: “எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது” என்று தனது பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் இருக்கும் பாஜகவினருக்கும் சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்துக்குத் துணையாக நில்லுங்கள். தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள்” என்றார்.
சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ. மைதானத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின், 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியது: “2019-ல் இருந்து கொள்கைக் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வரும் நாம், 2026-லும் அடைய இருக்கும் வெற்றிக்குத் தொடக்க விழா மேடை இது. கருத்தியல் கூட்டணி அமைத்திருக்கும் எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால், விரிசல் வராது. எங்களின் ஒற்றுமையை எரிச்சலுடன் பார்த்து, விரிசல் வருமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, உங்களின் ஆசையில்தான் மண் விழுமே தவிர, எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது.
நீங்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 2021-ல் தப்பித்தவறி அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருந்தால், இன்று தமிழகம் தரைமட்டத்துக்குச் சென்றிருக்கும். தமிழகத்தின் அத்தனை உரிமைகளும் அதிமுக கொத்தடிமைகளால் அடகு வைக்கப்பட்டிருக்கும். அதிமுக-வை மிரட்டிப் பணிய வைத்து, அவர்கள் கட்சியையும், தமிழகத்தையும் கபளீகரம் செய்திருக்கும் பாஜக. இந்தக் கொடிய சக்திகளிடம் இருந்து, தமிழகத்தை மீட்ட கூட்டணி, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இன்றைக்கு, இந்தியாவுக்கு வழிகாட்டும் கூட்டணியும் நமது கூட்டணிதான். தமிழகத்தை மற்ற மாநில மக்கள் எல்லாம், வியந்து பார்க்குற வகையில் திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகிறோம்.
இதை மத்திய பாஜக அரசால், தாங்கிக் கொள்ள முடியவில்லை. நம்முடைய மாநிலத்துக்கான எந்த நன்மையையும் செய்வது இல்லை. பிறகு, என்ன செய்கிறார்கள்? எப்படியெல்லாம் தமிழகத்தை வஞ்சிக்கலாம் என்று பார்த்து பார்த்துச் செய்கிறார்கள். நீட் தேர்வைத் திணித்தார்கள். புயல் – வெள்ளம் என்று பேரிடர் வந்தால், நிதி கொடுப்பதில்லை. இப்படி தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்.
இப்போது சமீப காலமாக, தமிழகம் எதனால் முன்னணியில் இருக்கிறது என்று பார்த்தவர்கள், கல்வியால்தான் இவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அந்தக் கல்வியைச் சீர்குலைக்க, தேசிய கல்விக் கொள்கையைத் திணித்தால் இவர்கள் கீழே சென்றிடுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், நாம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் உடனே நிதி தரமாட்டோம் என்று சொல்கிறார்கள். நான் வேதனையோடு சொல்கிறேன், பள்ளிக் குழந்தைகள் - ஆசிரியர்களுக்காகச் சம்பளம் தரும் நிதியில் கூட, கைவைக்கும் அளவுக்குக் கொடூரமானவர்கள் கையில் இந்தியா சிக்கியிருக்கிறது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன சொல்கிறார்? “தேசிய கல்விக் கொள்கையைத் தமிழகம் ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை” என்று மிரட்டுகிறார், எந்தச் சட்டத்தில் இப்படி இருக்கிறது? மும்மொழிக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறதா? இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமா அது? உங்களுக்கு ஒரு நீட் தேர்வையே குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காத வகையில் நடத்தத் தெரியவில்லை. நீங்கள் தமிழகத்துக்கு அட்வைஸ் செய்கிறீர்களா? பெயர்தான் தர்மேந்திர பிரதான், ஆனால், தருமமே உங்களிடம் இல்லையே?
நம்முடைய குழந்தைகளின் கல்விக் கனவைச் சிதைக்கும் காரியத்தை தர்மேந்திர பிரதான் செய்ய, அதைக் கண்டிக்காமல், தடுத்து நிறுத்தாமல், பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். இதுதான் ஒரு பிரதமருக்கு அழகா? இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள். எங்களுக்குத் தாய்மொழியான தமிழும், உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலமும் போதும். தேவைப்பட்டால் இந்தி என்ன? கிரேக்கம், லத்தீன் மொழிகளைக்கூட அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.
எனவே, எங்களை என்ன மிரட்டினாலும், உங்களால் இந்தி மொழியைத் திணிக்க முடியாது. மிரட்டினால், அஞ்சி நடுங்கிக் கூழைக்கும்பிடு போடுவதற்கு, அதிமுக என்ற நினைத்தீர்களா? இது திமுக. மிரட்டினால், அடங்கிப் போகிறவர்கள் இல்லை; அடக்க நினைப்பவர்களை அடங்கிப் போக வைப்பவர்கள். தமிழகத்துக்காகவும், தமிழ்மொழிக்காகவும் எத்தகைய அடக்குமுறையையும் எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர்கள் நாங்கள். இங்கு இருக்கும் நாங்கள் தமிழர்கள். சுயமரியாதையுள்ள திராவிடர்கள்.
மத்திய அரசு இப்போது என்ன நினைக்கிறார்கள்? இப்படி அறிவுப்பூர்வமாக முற்போக்குச் சிந்தனையுடன் பேசுகிறார்களே, இங்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் முழங்குகிறார்களே, இவர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்த்தார்கள். அதற்குத்தான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப்போகிறார்கள். நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கையை நம்முடைய பிரதிநிதித்துவத்தைக் குறைக்க நினைக்கிறார்கள். அதனால்தான் முன்கூட்டியே இந்தப் பிரச்சினையை நாம் இப்போது கையில் எடுத்து இருக்கிறோம்.
ஏற்கெனவே, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, என்ன சொன்னார்? எதிர்காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகமாகப் போகிறது என்று பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் என்ன சொன்னார்? மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவந்தபோது, 2024 தேர்தலுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை இருக்கும் என்று சொன்னார். நாம் இப்போது கேள்வியெழுப்பிய பின்னர், இப்போது என்ன சொல்கிறார்கள்? பொத்தாம் பொதுவாக, தமிழகத்துக்குத் தொகுதிகள் குறையாது என்று சொல்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்கு அதிகரிப்பார்களா? தெரியாது.
நாங்கள் கேட்கும் கேள்வி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? “மற்ற மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகரிக்காது” என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்? முன்னாள் பிரதமர்கள் நேருவும், வாஜ்பாயும் உறுதி கொடுத்தது போன்று, பிரதமர் மோடி ஏன் உறுதி கொடுக்க மாட்டேன் என்கிறார்?
எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள். “இப்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது. 1971 மக்கள்தொகை அடிப்படையில், தமிழகத்துக்குரிய பிரிதிநிதித்துவம் கிடைக்கும். தமிழகத்துக்குப் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று உறுதி கொடுங்கள். இன்றைக்குத் தமிழகம் எழுப்பியிருக்கும் இந்த உரிமைக்குரலை, தெலங்கானா, கர்நாடகா எதிரொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி. மற்ற மாநிலங்களும் நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.
மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். அதில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பிரதான எதிர்க்கட்சி அதிமுக கலந்து கொள்ளும் என்ற செய்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி. சிலர், கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம், இன்றைக்கு பாஜகவை மகிழ்விக்க நீங்கள் செய்யும் சுயநல அரசியலால் தமிழகத்துக்குத் தீங்குதான் ஏற்படும். பாஜகவை நம்பி சென்றவர்கள், அவர்களின் தேவை தீர்ந்தவுடனே மற்ற மாநிலங்களில் என்ன ஆனார்கள் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் பாஜகவினருக்கும் சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த விவகாரத்தில் தமிழகத்துக்குத் துணையாக நில்லுங்கள். தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள். நாம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம் என்று மற்ற மாநிலங்களுக்குக் காட்ட வேண்டும். அதுமூலமாகத்தான் வர இருக்கும் ஆபத்த தடுத்து, நம்முடைய உரிமையை வென்றெடுக்க முடியும். வென்றெடுத்தால்தான், எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் இதைச் செய்தே ஆக வேண்டும். இதில் தவறிவிட்டோம் என்றால், நமக்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT