Published : 28 Feb 2025 07:45 PM
Last Updated : 28 Feb 2025 07:45 PM
சேலம்: “கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் 90 நாளில் ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் சாராயம் விற்பனை செய்கிறார்கள். இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது” என நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தால் 90 நாளில் ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் சாராயம் விற்பனை செய்கிறார்கள். இது என்ன ஆட்சி, இது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என்ற கேள்வி எழுகிறது. முதலில் ஒரு முறை சாராயம் காய்ச்சி பல உயிர் போனதும் ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுத்தார்கள். மீண்டும் அதே வேலையை, அதே நபர் செய்திருக்கிறார். எந்த துணிவில் அவர் இப்படி செய்கிறார். தினமும் பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. எத்தனை படுகொலைகள் சாலையில் நடக்கிறது, சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. ஆனால், எங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறது.
நான் இருக்கும் உயரம் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதால், அச்சப்பட்டு, நடுக்கம் உண்டாகி, அந்தப் பெண்ணை (நடிகை விஜயலட்சுமி) அழைத்து வந்து பேச வைக்கின்றனர். எதுவாயினும் நேருக்கு நேர் என்னிடம் சண்டை போட வேண்டும். நான் பெரியாரை பற்றி பேசினால் நீங்கள் பெரியாரை பற்றி புகழ்ந்து பேசுங்கள். ஆனால், அவ்வப்போது என் மீது வழக்கு போடுகிறார்கள். அவதூறு பேசுபவர்களுக்கு சம்பளம் தருகிறார்கள்.
பல நேரங்களில் என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணை (நடிகை விஜயலட்சுமி) கூட்டி வருவார்கள். தேர்தல் நேரத்தில் மீண்டும் அந்தப் பெண்ணை (விஜயலட்சுமி) இங்கு அழைத்து வருவார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்று இருக்கிறது. போலீஸார் எங்கள் வீட்டில் அப்படி நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வு பெற்ற ராணுவ வீரரையும் கைது செய்திருக்கிறார்கள். அவர் அதிர்ந்து கூட பேச மாட்டார். அவரை அடித்து இழுத்து சென்றிருக்கிறார்கள். எனது வீட்டில் எல்லாம் சரியாக இருப்பார்கள். வெளியில் வாருங்கள் என்றால் வந்து இருப்பார்கள்” என்று அவர் கூறினார்.
பின்னர், சென்னை வந்த சீமான், “நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (பிப்.28) இரவு 8 மணிக்கு ஆஜராகிறேன்,” என்று தெரிவித்தார். அதன் முழு விவரம்: “வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறேன்” - சீமான் தகவல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT