Published : 28 Feb 2025 05:24 PM
Last Updated : 28 Feb 2025 05:24 PM

‘வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்’ - கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் உறுதி

கோவில்பட்டி: "எங்களுக்கு வாழ்வளிக்கும் விவசாயமே போதும். வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்" என எட்டயபுரத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

எட்டயபுரம் வட்டம் வெம்பூரில் சுமார் 2,700 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. 2,700 ஏக்கர் என்றால், வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, விளாத்திகுளம் வட்டம் பட்டிதேவன்பட்டி ஆகிய கிராமங்களின் மானாவாரி நிலங்கள் கையகப்படுத்தப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனிபிரிவு ஏற்படுத்தப்பட்டு, சுமார் 11 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு சிப்காட் தொழில் பூங்காவுக்குரிய நிலங்களை பார்வையிடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, சிப்காட் தொழில் பூங்காவுக்கு தனியார் தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி செயல்படுத்த வேண்டும். மானாவாரி நிலங்களை கையகப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நிலம் கொடுப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகளிடம் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இதில், பங்கேற்க வெம்பூர், பட்டிதேவன்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர். தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால், வெம்பூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருப்பதி, கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன், அதிமுக ஒன்றிய செயலாளர் தனபதி ஆகியோரது தலைமையில் விவசாயிகள் பாரதி மணிமண்டபத்தில் இருந்து ஊர்வலமாக சிப்காட் தொழில் பூங்காவுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டவாறு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ரேவதி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் மகாலட்சுமி, டி.எஸ்.பி. அசோகன், வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், “எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் மானாவாரி நிலங்களே போதும். சிப்காட் தொழில் பூங்கா தேவையில்லை. மேலும், சிப்காட் அமைக்க மானாவாரி நிலங்களை கையகப்படுத்தும்போது, அதனருகே உள்ள நீரோடைகளும் அழிக்கப்படும்.

விவசாயம் பாழாவது மட்டுமின்றி நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும். இப்பகுதியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள கால்நடைகளும் தண்ணீர் இன்றி மடியும் நிலை ஏற்படும். அதனால் எங்களுக்கு சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம்” என்றனர்.

மேலும், தங்களது கோரிக்கை தொடர்பான மனுவையும் வழங்கினர். அப்போது வெம்பூரைச் சேர்ந்த விவசாயி ராஜ் என்பவர், சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம் என கூறி டி.ஆர்.ஓ. காலில் விழ முயன்றார். அதனை டி.ஆர்.ஒ. ரேவதி தடுத்து கண்டித்தார்.

மக்களின் கருத்துக்களை கேட்ட டி.ஆர்.ஓ. ரேவதி, "உங்களது கருத்துக்கள், மனுக்கள் வாங்கியுள்ளோம். அடுத்து என்ன பண்ணலாம் என பார்த்துவிட்டு கூறுகிறோம். அனைவரது உணர்வுகளை நாங்கள் புரிந்துள்ளோம்" என்றார்.

இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, "வெம்பூரில் சிப்காட் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். காலம் காலமாக விவசாயம் செய்து, அதில் எந்தவித பலனையும் நீங்கள் பார்த்து இல்லை. விவசாயிகளின் சந்ததியினருக்கு உதவும் நோக்கில், வெம்பூரில் சிப்காட் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி அடையும் என்ற நோக்கிலேயே அரசு கொள்கை முடிவு செய்துள்ளது. அதனால், விவசாயிகளாகி நீங்கள் உங்களது நிலத்தை கொடுத்தாலும், உங்கள் சந்ததியினருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதற்கு விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு மேலக்கரந்தையில் காற்றாலை உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனம் சுமார் ரூ.300 கோடி திட்ட மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. இதில், முத்துலாபுரம் குறுவட்டத்துக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமையில் அடிப்படையில் சுமார் 1,300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், இப்பகுதி வளர்ச்சி அடையும் என காற்றாலை உதிரி பாகம் தொடங்கும் போது அப்போதைய அரசு தெரிவித்தது. இதனை நம்பி சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால், இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு இந்த 4 ஆண்டுகளில் முத்துலாபுரம் குறுவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. இங்கு வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக சென்றால், வெளிமாநிலங்களில் உள்ள தங்களது நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறுகின்றனர். இதே போல் தான் தற்போது சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக வாக்குறுதி அளிக்கப்படுகிறது. அரசின் மாயாஜால வாக்குறுதிகளை நம்புவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை" என்று அவர் கூறினார்.

தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் கூறுகையில், “கடந்த 2020-ம் ஆண்டு வெம்பூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக சிப்காட் வேம்பார் பகுதிக்கு இடமாற்றப்பட்டது. வேம்பாரில் 1,200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தற்போது மீண்டும் வெம்பூர் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சி நாங்கள் தடுக்கவில்லை. அதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். வெம்பூர் பகுதிலேயே ஏராளமான கார்பரேட் கம்பெனிகளின் தரிசு நிலங்கள் உள்ளன. அரசு புறம்போக்கு நிலங்களும் உள்ளன. அவற்றை விடுத்து விவசாய நிலங்களை கையகப்படுத்த போகிறோம் என்பது விவசாயத்தை அழிக்கும் செயலாகத் தான் பார்க்க முடிகிறது.

இதில், சுமார் 17 நீர்நிலைகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டுமே தவிர, இப்படி அவர்களிடம் உள்ள 1அல்லது 2 ஏக்கர் நிலங்களை பறிப்பது நியாயம் கிடையாது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விவசாய நிலங்களை கையகப்படுத்து திட்டத்தை அரசு கைவிட வேண்டும். எதிர்ப்பை மீறி இத்திட்டம் செயல்படுத்த முயன்றால், விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என்றார்.

இடப்பற்றாக்குறை: கருத்துக் கேட்பு கூட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் 2-வது மாடியில் நடத்தப்பட்டது. கூட்டம் நடக்கும் இடத்துக்கு ஏறிச் செல்ல விவசாயிகள், பெண்கள் சிரமப்பட்டனர். மேலும், 2-வது மாடியில் இருந்த அறையும் சிறியதாகவே இருந்தது. இதனால் சிலர் அடுத்துள்ள அறையில் அமர வைக்கப்பட்டனர். பல பேர் நின்று கொண்டிருந்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் வழியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. அங்கேயோ அல்லது தனியார் மண்டபங்களிலோ கூட்டத்தை நடத்தியிருந்தால் இந்த சிரமத்தை தவிர்த்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால், 2-வது மாடியில் தண்ணீரும் வைக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x