Published : 28 Feb 2025 04:26 PM
Last Updated : 28 Feb 2025 04:26 PM
சென்னை: சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றிய அரசு ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் 7.5.2021 அன்று ஆளுநர் மாளிகையில் ஆட்சிப் பொறுப்பேற்றபின், இந்த ஆட்சி அமைய வாக்களித்தவர்கள் பெருமையடையும் வகையிலும், வாக்களிக்காதவர்கள், வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருந்தும் வகையிலும் எல்லோருக்கும் பயன்தரும் வகையில் சிறப்பாகச் செயல்படும் இந்த அரசு என்று கூறினார். கூறியபடியே, ஆளுநர் மாளிகையில் ஆட்சிப் பொறுப்பேற்று கோட்டையில் வந்து முதல்வர் இருக்கையில் அமர்ந்தபின் முதல் கையெழுத்தாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அவற்றுள், அரசுப் போக்குவரத்துத் துறையின்கீழ் நடைபெறும் நகரப் பேருந்துகளில் மகளிர், மாணவியர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் அனைவருக்கும் கட்டணமில்லா விடியல் பயணம், கரோனா தொற்று பரவல் காரணமாக வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் 4,000 ரூபாய் என வழங்கி ஆணையிட்டார். வாக்களித்த மக்களும், வாக்களிக்காதவர்களும் பயன்பெற்று மகிழ்ந்து முதல்வரை வாழ்த்திப் பாராட்டினார்கள்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோதே உலகெங்கும் உயிர்ப்பலி வாங்கிக் கொண்டிருந்த கரோனா தமிழ்நாட்டிலும் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கரோனா தொற்றில் மாண்டு மடிந்தனர். அப்போது தடுப்பூசிகள் தாராளமாகக் கிடைத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மருத்துவ மனைகள் முழு வீச்சில் செயல்பட ஆவன செய்தார். தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் என உயர்த்திட புதிய புதிய திட்டங்களைச் செயல்படுத்தினார்.
* விடியல் பயணத்திட்டம்
* புதுமைப் பெண் திட்டம்
* தமிழ்ப் புதல்வன் திட்டம்
* நான் முதல்வன் திட்டம்
* முதல்வரின் காலை உணவுத் திட்டம்
* இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
* தாழ்த்தப்பட்டவர்களைத் தொழில் முனைவர் ஆக்கிடும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
* கலைஞர் கனவு இல்லம் திட்டம்
* மக்கள் கோரிக்கைகளைக் குறிப்பிட்ட நாள்களுக்குள் தீர்க்க முதல்வரின் முகவரி திட்டம்
* தொழில் வளர்ச்சிக்காக உலக நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகளை ஈர்த்து; 31 லட்சத்துக்கு மேலான வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
* புதிய சிப்காட் தொழில் வளாகங்கள்
* புதிய புதிய தொழிற்சாலைகள்
* தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மினி டைடல் பூங்காக்கள்
* மகளிர் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் வழங்கித் தொழில் முதலாளிகளாக ஆக்குதல்
* அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் சட்ட நடைமுறையைச் செயல்படுத்தி திருக்கோவில்களில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுடன் மகளிரை ஓதுவார்களாக நியமித்தல்
* அரசுத் துறைகளிலும், தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல் என தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலம் எனப் புகழ் படைத்துள்ளது
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் சிறப்புகளைக் கேட்ட தெலங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து அதன் செயலாக்க முறைகளைப் பார்வையிட்டுப் பாராட்டியத்துடன் இத்திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்தினர். இந்தியாவில் வேறு பல மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்துகின்றன.
இந்தியா கடந்து இத்திட்டம் கனடா அரசினால் பாராட்டப்பட்டு, அங்கும் செயல்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து நாடும் அடுத்த மாதம் தொடங்கித் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்திட முனைந்துள்ளது. இத்திட்டம் மட்டுமல்லாமல், முதல்வரின் , மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் நாட்டின் பல மாநிலங்கள் புதுச்சேரி, கர்நாடகா , உத்தர காண்ட் முதலிய பல மாநிலங்கள் ஏற்றுப் பின்பற்ற முனைந்துள்ளன.
அண்மையில், டெல்லி மாநிலத் தேர்தலின் போது பாஜக கட்சி, டெல்லியில் தம் ஆட்சி அமைந்ததும் மகளிர்க்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது. அமெரிக்க நாட்டு நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை முதல்வரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டியது. தமிழ்நாடு இந்திய நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் புதிய திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. ஒன்றிய அரசின் நிதிஆயோக் அறிக்கை 2023-2024ஆம் ஆண்டிற்கான, ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் குறித்த நான்காவது ஆய்வறிக்கையை 2024, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டது.
அந்த அறிக்கையில் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது என்று கூறிப் பாராட்டியது. அதே அறிக்கையில், காலநிலைமாற்றம், சுற்றுச் சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் சிறப்பாகச் செயலாற்றி தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல், பசிப்பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி – புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், சமத்துவமின்மையைக் குறைத்தல், உற்பத்தி மற்றும் நுகர்வு, அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள், பாலின சமத்துவம் ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது என்றும் அந்த அறிக்கை பாராட்டியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை: இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு இந்தியாவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது என்று பாராட்டப்பட்டது.
ஒன்றிய அரசின் நிர்யாத் ஆய்வறிக்கை: ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் ஜவுளி துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாடு ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கினை, அதாவது, 22.58 சதவீதத் துணிகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்று பாராட்டியது.
தேசிய இறக்குமதி, ஏற்றுமதி ஆண்டாய்வு அறிக்கை: 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேசிய இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில், இந்திய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகள் 16.19 பில்லியன் அமெரிக்க டாடலர் என்றும்; இதில், தமிழ்நாடு 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்றும் அறிவித்துப் பாராட்டியது. அதேபோல, 2022-2023 ஆம் ஆண்டிற்கான தோல் பொருள்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு 43.20 சதவீத தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் என்றும் பாராட்டப்பட்டது.
இந்திய உயர்கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை: அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் (AISHE) அறிக்கையின்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (GER) 49% பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டு தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியைப் பாராட்டியுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. அதிக அளவிலான மருத்துவக் கல்லுரிகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இவற்றின்மூலம் தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று கூறிப் பாராட்டியது.
மாநிலத் திட்டக்குழு அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்திரைத் திட்டங்களில் ஒன்று புதுமைப்பெண் திட்டம். அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து உயர்கல்வியில் சேரும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினால் கல்லூரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநிலத் திட்டக் குழு தனது ஆய்வின்மூலம் தெரிவித்துள்ளது. இதேபோல, அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினாலும், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை: நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சரால் 31.1.2025 அன்று 2024-25ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அது காலணிகள் உற்பத்தித் தொழில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது.
பாரம்பரிய தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்துவரும் சூழலில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38% பங்களிப்பையும் இந்தியாவின் மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47% பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது. தோல் பொருள்கள் உற்பத்தித் துறையில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐ.நா. அமைப்பின் 2024-ஆம் ஆண்டுக்கான சர்வதேச பணிமுனைப்புக் குழு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவச் சேவைகள் அளித்து வரும்திட்டத்திற்கு 2024-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் 79வது பொதுச்சபையில் சர்வதேசப் பணிமுனைப்புக் குழு விருது (United Nation Interagency Task Force Award) அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT