Published : 21 Feb 2025 02:25 PM
Last Updated : 21 Feb 2025 02:25 PM
திருச்சி: புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன்பாக, இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அழைத்து கலந்தாலோசித்து இருந்தால், சரியாக இருந்திருக்கும். ஆனால், இதை எதையும் செய்யாமல், அவர்களாகவே ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். பிறகு கண்டனம் வரும்போது, மத்திய அரசு இறங்கி வந்து கடிதம் எழுதுவது, தூண்டில் போட்டுவிட்டு அதில் மீன் ஏதாவது சிக்காதா? என்று பார்ப்பது போல் இருக்கிறது மத்திய அமைச்சரின் கடிதம்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
திருச்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (பிப்.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான கல்வியை வழங்கப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தமிழகம் தரமான கல்வியைத் தான் வழங்கிக் கொண்டிருக்கிறது.
பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவருவதை தெரிந்து கொண்டோம். குறிப்பாக, மும்மொழிக் கொள்கை தொடர்பான ஷரத்து, 3,5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறை, உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தன. இது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் எனக்கூறினோம். இந்தியாவிலேயே, அதிகளவில் இடைநிற்றல் இல்லாத ஒரு மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதாக கூறினோம் .
ஆட்சி மாற்றத்தின் போது 16 சதவீதமாக இருந்த இடைநிற்றலை, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு 5 சதவீதமாக கொண்டு வந்திருக்கிறோம். முதல்வர், துணை முதல்வர், தோழமைக் கட்சிகள், மக்கள் கோலமிட்டு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு மீண்டும் ஒரு மொழிப்போரைக் கொண்டுவரக்கூடாது என்ற வகையில், தமிழக அரசின் கண்டனத்தை தெரிவித்தோம். இன்றைக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், தமிழின் பெருமையை நாங்களும் முன்னெடுத்து வருகிறோம். பிரதமரும் பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார் என்று பல்வேறு செய்திகளை கூறியிருக்கிறார். கடிதத்தின் இறுதியில், மத்திய அரசின் கோரிக்கையை ஒப்புக்கொண்டு கையெழுதிடுங்கள். இளைய சமூகத்தை மனதில் வைத்துதான் நாங்கள் இதை வடிவமைத்திருக்கிறோம், என்று கூறியிருக்கிறார். இளைய சமூகத்தை மனதில் நிறுத்தி இதை செய்திருந்தால், அதற்கென நிபந்தனைகளை விதிக்கக்கூடாது.
இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் கல்வி கற்றுள்ள மாணவர்கள், பல்வேறு துறைகளில் சாதித்து உயர்ந்து நிற்கிறார்கள். இஸ்ரோ உள்பட, மருத்துவம், பொறியியல் என இன்று சாதித்தவர்கள் அனைவருமே இருமொழியை ஏற்று படித்தவர்கள்தான்.
புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் முன்பாக, இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை அழைத்து கலந்தாலோசித்திருந்தால், சரியாக இருந்திருக்கும். ஆனால், இதை எதையும் செய்யாமல், அவர்களாகவே ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். பிறகு கண்டனம் வரும்போது, மத்திய அரசு இறங்கி வந்து கடிதம் எழுதுவது, தூண்டில் போட்டுவிட்டு அதில் மீன் ஏதாவது சிக்காதா? என்று பார்ப்பது போல் இருக்கிறது மத்திய அமைச்சரின் கடிதம்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT