Last Updated : 20 Feb, 2025 09:13 AM

5  

Published : 20 Feb 2025 09:13 AM
Last Updated : 20 Feb 2025 09:13 AM

பெற்றோரைக் கொண்டாட ஆசிரியர்களை திண்டாட விடலாமா?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ மாநாடுகளை நடத்த அறிவுறுத்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, கடலூர் மாவட்டம் கண்டப்பன்குறிச்சியில் மண்டல அளவிலான மாநாடு 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பு ஆசிரியர்கள் வசம் கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளதால் ஆசான்கள் புலம்பித் தவிக்கிறார்கள்.

கடலூர், அரியலூர், பெரம்​பலூர், மயிலாடு​துறை, விழுப்புரம், கள்ளக்​குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்​டங்​களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி​களில் படிக்கும் மாணவர்​களின் பெற்றோரை இந்த மாநாட்டுக்கு அழைத்துவர ஆசிரியர்கள் பணிக்​கப்​பட்​டிருப்பது பெரும் சர்ச்​சையாகி இருக்​கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர், “இம்மா​நாட்​டிற்கு 7 மாவட்​டங்​களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி​களில் இருந்தும் அதிகபட்சம் 20 பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் என தலைமை ஆசிரியர்​களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தர​விட்​டுள்​ளனர்.

இவர்களை அழைத்து வர அந்தப் பகுதி​களில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி​களைச் சேர்ந்த பேருந்​துகள் மற்றும் வேன்களை அனுப்​பிவைக்​கவும் உத்தர​விடப்​பட்​டுள்ளது. அதற்கான டீசல் செலவு​களையும் வாகனங்களை அனுப்புகிறவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகாலை 4 மணிக்கு பள்ளி​களுக்கு வாகனங்கள் வந்து​விடு​மாம். அதற்கு முன்னதாக பெற்றோர்களை ஆசிரியர்கள் பள்ளியில் தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். மாநாட்டுக்கு வரும் வழியிலேயே பெற்றோருக்கான காலை சிற்றுண்டியை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். காலை 8 மணிக்கு மாநாடு தொடங்கி 12 மணிக்கு முடிந்​து​விடும். பிறகு, பெற்றோர்​களுக்கான மதிய உணவையும் ஆசிரியர்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்​களின் பெற்​றோர்கள் பெரும்​பாலும் தினக்​கூலிகளாக இருப்​பார்கள். அவர்களை மாநாட்டுக்கு அழைத்தால் அன்றைக்கான ஊதியத்​தையும் கேட்​கிறார்கள். இதையும் சேர்த்தால் ஒரு மாணவனின் பெற்​றோருக்கு குறைந்​த​பட்சம் ரூ. 2 ஆயிரம் செலவு செய்ய வேண்​டும்.

பள்ளி​களில் மாநில அளவில் போட்டிகளில் சாதித்​துள்ள மாணவர்​களையும் அழைத்துவர வேண்டும் என்பதால் அவர்​களுக்கான செலவு​களையும் ஆசிரியர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்​டும். இந்தச் செலவுகளை எல்லாம் சம்பந்​தப்பட்ட பள்ளி​களைச் சேர்ந்த ஆசிரியர்களே ஷேர் பண்ணிக் கொள்வது என முடிவெடுத்​திருக்​கிறோம்.

ஆளும் கட்சி​யினரிடம் உதவி கேட்டால் ‘கட்சிக்கு டொனேஷன் கொடுப்​ப​தில்லை. இப்படி​யாவது செலவு செய்யுங்கள்’ என்று சிரிக்​கிறார்கள். இதே நாளில் தேசிய திறனறி தேர்வு நடைபெற உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்​கப்பட்ட ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு இதை நடத்த முடிவெடுக்​கப்​பட்​டுள்ளது.

மாநாட்டில் பங்கெடுக்காத தனியார் பள்ளிகள் பேருந்​துகளை இலவசமாக அனுப்பி வைப்பதுடன் விழா செலவுக்கும் நன்கொடை வழங்க வேண்டும். பெரிய பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்​களில் மாநாடு குறித்து விளம்​பரங்​களைக் கொடுக்​கவும் அறிவுறுத்தி இருக்​கிறார்கள்.

கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மண்டலத்தில் நடத்தப்பட்ட இம்மாநாடு அத்தனை சக்சஸாக​வில்லை என்பதால் இம்முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் மெனக்​கிடு​கிறார்கள். அதற்காக எங்களை எல்லாம் படுத்தி எடுக்​கிறார்கள். எக்களைக் கொண்டாட மாநாடு நடத்துங்கள் என்று இவர்களை எந்தப் பெற்றோர் வந்து கேட்டார்கள் என தெரிய​வில்லை” என்று நொந்து கொண்டனர். மாநாடு நடத்தட்டும். ஆனால், அதற்கான செலவுகளை ஆசிரியர்கள் தலையில் சுமத்​துவது அத்தனை சரியில்​லையே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x