Published : 19 Feb 2025 11:15 AM
Last Updated : 19 Feb 2025 11:15 AM
சென்னை: பள்ளி செல்லும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது என குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, பள்ளி மாணவிகள் தொடர்ந்து பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மிக உரிமையோ இல்லை.
எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஸ் உடனடியாக விலக வேண்டும். முதல்வர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT