Last Updated : 11 Feb, 2025 09:16 AM

 

Published : 11 Feb 2025 09:16 AM
Last Updated : 11 Feb 2025 09:16 AM

அதிமுகவா... என்.ஆர்.காங்கிரஸா..? - புதுச்சேரிக்கு என்ன கணக்கு வைத்திருக்கிறார் விஜய்?

அரசியல் கட்சியை தொடங்கி ஆர்ப்பாட்டமாய் வருடம் ஒன்றைக் கடந்திருக்கும் நடிகர் விஜய், மாவட்ட வாரியாக கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் வேலையில் முழுமூச்சாய் இருக்கிறார். தமிழகத்தில் கிட்டத்தட்ட கட்சி அமைப்பை கட்டமைத்து விட்ட விஜய், அடுத்தகட்டமாக புதுச்சேரிப் பக்கம் பார்வையை திருப்ப விருப்பதாகச் சொல்கிறார்கள்.

யூனியன் பிரதேசமான புதுச்​சேரி​யானது தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களை ஒட்டி நான்கு பிரதேசங்களாக உள்ளது. இதில் பெரும்​பகுதி தமிழகத்​தையொட்டி உள்ளது. இருப்​பினும் தமிழக அரசியலின் தாக்கம் புதுச்​சேரியில் பெரும்​பாலும் எதிரொலிப்​ப​தில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் எழுச்​சிக்குப் பிறகு கடந்த அரை நூற்றாண்​டுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே இல்லை.

ஆனால் புதுச்​சேரி​யில், நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வருகிறது. இப்போது கூட காங்கிரஸில் இருந்து பிரிந்த ரங்கசாமி தான் பாஜக-வுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி நடத்து​கிறார். தமிழகம் பெரிய மாநிலம் என்பதால் கட்சி மற்றும் தலைவர்​களின் செல்வாக்கு, ஆட்சிக்கு எதிரான - ஆதரவான மக்களின் மனநிலை உள்ளிட்டவை வாக்குகளைத் தீர்மானிக்கும். ஆனால் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்​சேரியில், ஒரு தொகுதிக்கான வாக்காளர் எண்ணிக்கை என்பது 40 ஆயிரத்​துக்கும் குறைவாகவே இருக்​கிறது.

இதனால், மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்ற பிரபலங்களே இங்கு பெரும்​பாலும் எம்எல்​ஏ-க்களாக வெற்றி பெறுகிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல், கட்சி வேறுபாடு​களைக் கடந்து வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்து அவர்களுக்கு சீட் கொடுத்து எம்எல்​ஏ-க்களாக்கி அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது தான் புதுச்சேரி ஸ்டைல். தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்​ட​வர்கள் சினிமா கவர்ச்சி மூலமே அரசியலில் தாங்கள் நினைத்ததை சாதித்​தார்கள். ஆனால், புதுச்சேரி அரசியல் களத்தில் அப்படியான சினிமா கவர்ச்​சிக்​கெல்லாம் வேலை இல்லை.

இருந்த போதும், தமிழகத்தைப் போலவே புதுச்சேரி​யிலும் தடம்ப​திக்க நினைக்கும் தவெக அதற்கான முயற்சி​களையும் எடுக்கத் தொடங்கி இருக்​கிறது. தமிழகத்​துக்கு முதல்வர் வேட்பாளர் விஜய், புதுச்​சேரிக்கு புஸ்ஸி ஆனந்த் என்று முதலில் பேச்சு அடிபட்டது. ஆனந்த் ஏற்கெனவே இங்கு எம்எல்​ஏ-வாக இருந்தவர் என்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

ஆனால், அண்மையில் தனது வாக்கை புஸ்ஸி ஆனந்த் தமிழகத்தின் சோளிங்கர் தொகுதிக்கு மாற்றி​விட்டதாக ஒரு பேச்சு அடிபடு​கிறது. அப்படி​யா​னால், லாட்டரி அதிபர் மார்ட்​டினின் மகன் ஜோஸ் சார்லஸை இங்கு முன்னிறுத்​தலாம் என்ற பேச்சுக் கிளம்​பியது. மார்ட்டின் மருமகன் ஆதவ் ஆர்ஜுனா தவெக-வில் இணைந்த பிறகு இந்தப் பேச்சு இன்னும் பலமாக அடிபட ஆரம்பித்​திருக்​கிறது.

தேர்தலைக் குறிவைத்து சார்லஸும் பொதுநிகழ்ச்​சிகளில் பங்கேற்று மக்களுக்கு நல உதவிகளை வழங்கி வருகிறார். விஜய்யும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நல்ல நட்பில் இருக்​கிறார்கள். பாஜக கூட்ட​ணியில் கசப்பான அனுபவங்​களைச் சந்தித்து வரும் ரங்கசாமி, 2026 தேர்தலுக்கு கூட்டணி மாறும் யோசனையில் இருக்​கிறார்.

ஒருவேளை, விஜய்​யுடனான கூட்டணி செட்டானால் என்.ஆர்​.​காங்​கிரஸ் - தவெக கூட்டணி அமையலாம் என்கிறார்கள். இது பற்றி பேசிய புதுச்சேரி தவெக-​வினர், “தமிழகத்தில் கட்சியை கட்டமைக்கும் வேலைகளில் தலைவர் விஜய் தற்போது மும்முரமாக இருக்​கிறார்.

அங்கே கட்சிப் பொறுப்​பாளர்களை நியமித்து முடித்த பிறகுதான் புதுச்சேரி வேலைகளை தொடங்​குவார் எனச் சொல்லி இருக்​கிறார்கள். இருப்​பினும் இப்போதைக்கு அந்தந்த தொகுதி​களில் மக்களுக்கான நல உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம். தமிழகத்​திலேயே கூட்ட​ணிக்கு தயார் எனச் சொல்லி இருக்கும் தலைவர், புதுச்​சேரி​யிலும் கூட்டணி அமைத்​துத்தான் தேர்தலைச் சந்திப்​பார்.

புதுச்​சேரியை பொறுத்தவரை காங்கிரசுடன் திமுக இருப்​பதால் அந்தக் கட்சி​யுடன் கூட்ட​ணிக்கு வாய்ப்​பில்லை. ஒருவேளை, தமிழகத்தில் அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால் இங்கேயும் அந்தக் கூட்டணி அமையும். அப்படி இல்லாத​பட்​சத்தில் பாஜகவை விலக்​கி​விட்டு வந்தால் ரங்கசாமி​யுடன் கூட்டணி அமைக்க எங்​களுக்கு தயக்கம் இருக்​காது” என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x