Published : 11 Feb 2025 08:20 AM
Last Updated : 11 Feb 2025 08:20 AM
“உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் அந்நாட்டினர் அசாம் வழியாக தமிழ்நாட்டுக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள்” என அண்மையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேட்டியளித்திருந்தார். அவர் சொன்னது போலவே, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் ஜவுளி தொழிலை நம்பி தமிழகத்துக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு குறைவான கூலி கொடுத்தால் போதும் என்பதால் ஒரு சில நிறுவனங்கள் இவர்களின் வருகையை ஊக்குவிப்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் மட்டுமல்லாது கோவை, கரூர் பகுதிகளிலும் அண்டை மாநிலமான கேரளாவிலும் வங்கதேசத்தினரின் ஊடுருவல்கள் சகஜமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஐபி அதிகாரிகள்.
இதுகுறித்து நம்மிடம் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், “வங்கதேம் - இந்திய எல்லைக் கோடானது மிக நீளமானது. மேற்குவங்கம், அசாம், திரிபுரா, மேகாலயா என 4 மாநிலங்கள் இந்த எல்லைக் கோட்டில் வருகின்றன.
இதனால் ஊடுருவல்காரர்களைக் கண்காணிப்பதும் கஷ்டமான ஒன்றாக உள்ளது. வேலி போடப்பட்ட இடத்தில் இரண்டு பக்கமும் மரப்படிக்கட்டுகள் கொண்ட சரக்கு வாகனங்களை நிறுத்தி எளிதாக எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். இவர்களை இப்படி கடத்தி விடுவதற்கென்றே எல்லையோர கிராமங்களில் ‘தலால்’ என்றழைக்கப்படும் ஏஜென்டுகள் ஏராளமானோர் உள்ளனர். இந்திய பண மதிப்பில் ரூ. 10 ஆயிரமும், வங்க தேச பணத்தில் 15 ஆயிரம் தாகாவும் இருந்தால் இவர்கள் பத்திரமாக நாடுகடத்தி விடுவார்கள்.
இப்படி எல்லை தாண்டுகிறவர்களை இந்தியாவின் சில்சர், கவுகாத்தி ரயில் நிலையங்கள் வரைக்கும் கொண்டுவந்து விடுவது தலால்களின் பொறுப்பு. போலி ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை தயாரித்துக் கொடுப்பதிலும் தலால்களின் கைங்கர்யம் உண்டு.
முன்னதாக ஊருவியவர்கள் மூலம் தலால்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமே பணம் செலுத்தி, மற்றவர்களும் வரிசைகட்டி வந்து கொண்டே இருக்கிறார்கள். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருபவர்கள் முதலில் சிறு பனியன் கம்பெனிகளில் வேலை தேடிக் கொள்கிறார்கள். முதல் ஆறு மாதங்களுக்கு நிறுவனத்தை மாற்றாமல் ஒரே நிறுவனத்தில் பணி செய்வார்கள். அதன் பிறகு போலி ஆவணங்களை தயார் செய்து கொண்டு பெரிய நிறுவனங்களில் வேலைகளில் செட்டிலாகிவிடுகிறார்கள்.
இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தினால் போலீஸ் சோதனையில் சிக்கிவிடுவோம் என்பதால் இவர்கள் பெரும்பாலும் நடந்தே தான் செல்கிறார்கள். தொலைதூரங்களுக்கு பேருந்தில் பயணிக்கிறார்கள். ஜவுளி வேலை தெரியாதவர்கள் கட்டிட வேலைக்கும் போகிறார்கள். ஆனால், எந்த வேலைக்குப் போனாலும் கூட்டம் கூட்டமாகத்தான் போகிறார்கள். வசிப்பதும் அப்படித்தான். வங்கதேசத்தை விட இங்கு இரண்டு மடங்கு ஊதியம் கிடைப்பதும் ஊடுருவல்காரர்கள் தமிழகத்துக்கு வருவதற்கு முக்கிய காரணம்.
நம்முடைய ஜிபே போல், வங்கதேசத்தில் பிகேஷ் உண்டு. இங்கு சம்பாதிக்கும் பணத்தை தலால்கள் சொல்லும் எல்லையில் உள்ள இந்திய கிராமத்தில் வசிப்பவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான கமிஷனை எடுத்துக் கொண்டு பிகேஷ் மூலம், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மொத்தப் பணத்தையும் அனுப்பிவிடுகிறார்கள்.
வங்கதேச எல்லையானது திறந்தவெளியாக இருப்பதால் தினமும் இப்படியான ஊடுருவல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படி வருபவர்களில் பலர் இங்குள்ள பெண்களை திருமணம் செய்து செட்டிலாகியும் விடுகிறார்கள். சொந்த நாட்டைவிட இங்கு வாழ்க்கைத் தரம், கல்வி, வருமானம் திருப்தியாக இருப்பதால் இங்கு வந்து செட்டிலாகும் யாரும் மீண்டும் தாய்நாடு திரும்ப நினைப்பதே இல்லை. எதிர்பாராத விதமாக இவர்கள் போலீஸ் சோதனையில் கைதாகும் போது, இவர்களின் மனைவிமார்கள் கைக்குழந்தைகளுடன் போலீஸ் ஸ்டேஷனில் வந்து நிற்கும் அவலங்களும் நடக்கின்றன.
இதையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி, வங்கதேசத்திலிருந்து வேலை தேடி வருபவர்களுக்கு எம்ளாய்மென்ட் விசா கொடுத்து சட்டப்பூர்வமாக அவர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம். அதேபோல் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வாரந்தோறும் சோதனை நடத்தினால் ஊடுருவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்” என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT