Published : 08 Feb 2025 09:00 PM
Last Updated : 08 Feb 2025 09:00 PM
விழுப்புரம்: “ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி 2026 தேர்தலுகான முன்னோட்டமாகும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்ல, நிரந்தரமாக திமுகவே வெற்றி பெறும். இண்டியா கூட்டணியின் பலவீனத்தால் டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது” என்று தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை முழுமையாக புறக்கணித்துள்ள பாஜக அரசை கண்டித்து இன்று (பிப்.8) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த வனத்துறை அமைச்சர் பொன்முடி முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழக அரசின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசே ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியாகும்.
இந்த வெற்றியால், 2026 தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். சீமான் பாஜக வாக்கை பெறுவதற்காகத்தான் பெரியாரை எதிர்த்து பேசி 24 ஆயிரம் வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை இழந்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாங்கியதை விட கூடுதல் வாக்குகள் என 75 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் . அதிமுகவினர் வாக்குகளான சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நோட்டாவுக்கு சென்றுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி 2026 தேர்தலுகான முன்னோட்டமாகும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்ல, நிரந்தரமாக திமுக வெற்றி பெறும். இண்டியா கூட்டணியின் பலவீனத்தால் டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது” என்று அவர் கூறினார். இந்தச் சந்திப்பின்போது, எம்எல்ஏ மஸ்தான், மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் எம்எல்ஏ-க்கள் செந்தமிழ் செல்வன், குத்தாலம் கண்ணன், மாசிலாமணி, சேதுநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT