Published : 08 Feb 2025 03:17 PM
Last Updated : 08 Feb 2025 03:17 PM
ஈரோடு: “இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, திமுகவுக்கு எதிரான வாக்குகள் நாதகவுக்கு கிடைத்துள்ளன” என்று ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த வெற்றிக்கு காரணம், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கூறிவருவது போல, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும்தான். இந்த தேர்தல் முடிவுகள் தான் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, அவர்களுடைய வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு அச்சாரமாக திமுக ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி அமைந்துள்ளது. மக்களை நேரடியாக சந்தித்தது தேர்தலில் வாக்கு சேகரித்தோம். பிரச்சார உத்தியின் அடிப்படையில் திமுக வாக்கு வாங்கியுள்ளது.
எனவே, தோல்வியடைந்த எதிர்க்கட்சி வேட்பாளர் முன்வைக்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடாததால் எங்களுக்கு எதிரான வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளது. திமுக எந்தக் காலத்திலும் யாரை கண்டும் பயப்படாது,” என்று அவர் கூறினார்.
இதனிடையே, 8-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 43,821 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் வெற்றி முகம் கண்டுள்ளதால் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8-வது சுற்று நிலவரம்: வி.சி.சந்திரகுமார் (திமுக) - 55,849 வாக்குகள் / சீதாலட்சுமி (நாதக) - 12,028 வாக்குகள் / நோட்டா - 2,710.
நாதக வேட்பாளர் சொல்வது என்ன? - அதேவேளையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி கூறும்போது, “நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு கிடையாது. கடந்த இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை விட கூடுதலான வாக்குகளைப் பெற்று வருவதால், இது பின்னடைவு கிடையாது. 2026-ம் ஆண்டு திமுகவுக்கு நிச்சயமாக பின்னடைவு ஏற்படுத்தப்படும்.
இந்த இடைத்தேர்தலில், திமுக கூடுதலான வாக்குகளை வாங்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் நிராகரித்து உள்ளனர். கள்ள ஓட்டுக்கள்தான், திமுக கூடுதலான வாக்குகள் வாங்குவதற்கான காரணம். ஈரோடு இடைத்தேர்தலை 2026-ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்த்ததால், திமுக தலைமைக்கு அச்சம் வந்துள்ளது. எனவே, 2026-ம் ஆண்டு தேர்தலில் இந்த மண்ணில் திமுக கடுமையான போராட வேண்டியிருக்கும்.
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளன. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை. பெரியார் குறித்து சீமான் பேசியது புரிதல் அடிப்படையில் சரியாக இருப்பதால் தான் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சி மக்களை நம்பிக்கை வைத்து தேர்தலில் நின்றது,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT