Published : 07 Feb 2025 01:23 AM
Last Updated : 07 Feb 2025 01:23 AM
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் பயிர் கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஆட்சிக்கு வந்தவுடன், முதல் கையெழுத்து விவசாயக் கடன் தள்ளுபடி என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி எண் 33-ல் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக.
திமுக அரசின் சாதனையாக, ஆட்சிக்கு வந்து, கடந்த 07.05.2021 முதல், 31.12.2023 வரை, ரூ.35,852.48 கோடி கூட்டுறவு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில், புயல், வெள்ளம் என, சிறு குறு விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம்.
அப்படி இருந்தும், கடந்த 31.03.2024 வரை நிலுவையில் இருக்கும் கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.19,008 கோடி மட்டும்தான் எனில், இத்தனை கடினமான காலங்களிலும், சிறு குறு விவசாயிகள் தங்கள் கடனை முறையாகத் திரும்பச் செலுத்தி வருகிறார்கள் என்பதுதானே பொருள். திமுகவின் வாக்குறுதியை நம்பி ஏமாந்துபோன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது திமுக.
எனவே, இதற்காக ஒரு குழுவை உடனடியாக அமைத்து, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை நம்பி, 4 ஆண்டுகளாக ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலை, சிறு, குறு விவசாயிகளுக்கும் தொடரக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT