Published : 04 Feb 2025 02:27 AM
Last Updated : 04 Feb 2025 02:27 AM
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டுக்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 10-ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
சட்டப்பேரவையில் வரும் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதுதொடர்பாகவும், அதில் இடம்பெறும் அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் தரப்படும். மேலும், தமிழக அரசு சார்பில் சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT