Published : 03 Feb 2025 02:18 AM
Last Updated : 03 Feb 2025 02:18 AM
புதுடெல்லி: அதிக மக்கள் தொகை மற்றும் செழுமையான வரலாற்று பின்ன ணியைக் கொண்ட பிஹார் மாநிலத்துக்கு இதுவரை ஒரு நல்ல சர்வதேச விமான நிலையம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பில் பிஹார் மாநிலத்துக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்தே இந்த பட்ஜெட்டில் பிஹாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பட்ஜெட்டுக்குப் பிறகு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது: முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் காலத்தால் அழியாத சொற்றொடரான ‘‘மக்களின் அரசாங்கம், மக்களால், மக்களுக்கு’’ அளிக்கப்பட்ட பட்ஜெட் இது. மக்களின் குரலை அடிப்படையாகக் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அசாம் மாநிலத்துக்கும்தான் தேர்தல் வருகிறது.
அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் நாளந்தா ராஜ்கிர் கலாச்சார மையங்களைக் கொண்ட மாநிலம் பிஹார். இவ்வளவு இருந்தும் அம்மாநிலத்தில் இதுவரை ஒரு நல்ல சர்வதேச விமான நிலையம் இல்லை. இதற்கு நாமெல்லாம் பொறுப்பு இல்லையா? அவர்களுக்கு இதை நாம் கொடுக்க வேண்டாமா? பிஹார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா?. பிஹார் தொழிலாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வேலை செய்ய திட்டங்களை வகுக்க வேண்டாமா? இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT