Published : 01 Feb 2025 06:04 AM
Last Updated : 01 Feb 2025 06:04 AM
சென்னை: விசிகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா நேற்றிரவு சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘‘என்னுடைய ஆசான் திருமாவளவனிடம் ஆசி பெறுவதற்காக வந்தேன். தமிழக வெற்றிக் கழகத்தில் என்னுடைய பொறுப்பு கொள்கை ரீதியாக, மக்கள் நலனுக்கானதாக இருக்கும். பெரியார், அம்பேத்கர் கொள்கையின்படி என் பயணம் இருக்கும். தவெகவும் விசிகவுக்கும் கொள்கை ரீதியாக ஒற்றுமையாகதான் இருக்கிறோம். விஜய்யும், திருமாவளவனும் ஒரே கொள்கை, ஒரே கருத்துடன்தான் இருக்கிறார்கள்’’ என்றார்.
திருமாவளவன் கூறும்போது, ‘‘தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை ஆதவ் அர்ஜூனா தொடங்கி வைத்திருக்கிறார். விசிகவில் இருந்து வெளியேறி இன்னொரு கட்சியில் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்படும் சூழலில் என்னுடைய வாழ்த்தும் தேவை என விசிக அலுவலகம் தேடி வந்திருக்கும் அவரது அணுகுமுறையை தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்.
கருத்தியல் ரீதியாகவும், களத்திலும் எதிரெதிர் துருவங்களாக நின்று செயல்படுகிற நிலை இருந்தாலும்கூட இத்தகைய நட்புறவை பேணுவது நாகரிகமான அணுகுமுறை. இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. எந்த முடிச்சும் போட்டு பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT