Published : 29 Jan 2025 09:20 AM
Last Updated : 29 Jan 2025 09:20 AM
இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் துயர் கரோனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகட்டுமேனிக்கு ஈவிரக்கமின்றி காவு வாங்கிச் சென்ற அந்த பெருந்தொற்று தந்துசென்ற வலியை இன்னமும் கூட பல குடும்பங்கள் அனுபவித்து வருகின்றன. பெருந்தொற்றின் பேரழிவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் எந்தவிதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தன.
தாயையும் தந்தையையும் கரோனாவுக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சமும், மாநில அரசு ரூ.5 லட்சமும் நிவாரணம் அறிவித்தன. தாய் அல்லது தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சத்தை நிவாரணமாக அறிவித்த மாநில அரசு, கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்லூரி வரையிலான படிப்புச் செலவுகளையும் ஏற்பதாக உத்தரவாதம்தந்தது. ஆனால், இதெல்லாம் சொன்னபடி நடந்ததா என்றால் இல்லை என்கிறார்கள்.
பல்லடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவர் கரோனாவின் ஆரம்ப அலையில் அதற்கு பலியானவர். இவரது மகள் தற்போது கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தந்தை இறந்த மறுவாரமே கரோனா நிவாரண உதவித் தொகைக்காக விண்ணப்பித்தார். ஆண்டுகள் நான்காகியும் இன்னமும் அதற்கு அரசு தரப்பிலிருந்து பதிலில்லை. பஞ்சலிங்கத்தின் மனைவி தினமும் 12 மணி நேரம் உழைத்து தனது மகளை படிக்க வைத்து வருகிறார்.
இதேபோல் திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் கரோனா தொற்றுக்குப் பலியானார்கள். இவர்களது மகள் கெட்டிக்காரத்தனமாக பள்ளிப் படிப்பை முடித்து தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கும் உயர் கல்விக்கான அரசின் உதவித் தொகை இதுவரை கைக்குக் கிடைக்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள் உதவியால் மருத்துவக் கல்வியை தடைபடாமல் தொடர்கிறார் அந்த மாணவி.
இந்த இரண்டு பிள்ளைகளும் சாம்பிள் தான். இப்படி தமிழகமெங்கும் தகுதியான ஆயிரக் கணக்கான பிள்ளைகள் கரோனா நிவாரண உதவித் தொகை கிடைக்காமல் சிரமத்துக்கு நடுவே படிப்பை தொடர்வதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசிய திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் சிலர், “மாவட்ட வாரியாக குழந்தைகளுக்கான கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், அனைத்துத் தகுதிகள் இருந்தும் மாவட்டத்துக்கு 150 முதல் 200 குழந்தைகள் வரை கரோனா நிவாரண உதவிகள் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கான நிதியை அரசு ஒதுக்காமல் கிடப்பில் வைத்திருக்கிறது. உரிய காலத்தில் நிவாரண உதவி கிடைக்காததால் இந்தக் குழந்தைகள் எல்லாம் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் பெற்று கல்வி பயின்று வருகிறார்கள்” என்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டதற்கு, “ஏற்கெனவே தகுதியான அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. யாருக்காவது விடுதல் இருந்தால் அவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த இந்தக் குழந்தைகள் ஏற்கெனவே மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நிவாரணம் தருவதாக அறிவித்த தங்களுக்கு உள்ளது என்பதை புரிந்துகொண்டு மத்திய - மாநில அரசுகள், அவர்களின் கண்ணீரைக் காலத்தே துடைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT