Published : 29 Jan 2025 06:06 AM
Last Updated : 29 Jan 2025 06:06 AM
சென்னை: மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர்(61), ராஜி(35). மீனவர்களான இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை வழக்கம்போல் ஒரே படகில் மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில், காலை 7 மணியளவில் இவர்கள் சென்ற படகு மற்றும் வலை ஆகியவை விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை பகுதியில் தனியாக கரை ஒதுங்கியது.
இதைக் கண்டு கரையோரத்தில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வேறு சில படகுகளை எடுத்துக் கொண்டு கடலில் பாஸ்கர், ராஜி ஆகிய இருவரையும் தேடினர். அப்போது, இருவரும் நீரில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. மீனவர்கள் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மெரினா போலீஸார் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து மீனவர்கள் இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் இச்சம்பவம் குறித்து தனியாக விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT