Published : 23 Jan 2025 03:49 PM
Last Updated : 23 Jan 2025 03:49 PM

தூய்மை பணியாளர்களும் நம்மில் ஒருவர்தான்! - ‘மக்கும், மக்காத’ குப்பைகளை பிரித்து வழங்க தயங்குவது ஏன்?

வீடுகளில் வழங்கும் குப்பைகளை சேகரித்து வந்து, வகை பிரிக்கும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.| படங்கள்: ச.கார்த்திகேயன் |

சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பு கொண்டது. இதில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் இருந்து தினமும் 5,900 டன் குப்பை உற்பத்தியாகிறது. இவை சரிபாதியாக கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

குப்​பைகளை வீடு வீடாக சேகரித்து, குப்பை தொட்​டிகளில் கொட்டு​வது, அவற்றை லாரிகள் மூலம் ஏற்றி சென்று, குப்பை கொட்டும் வளாகங்​களில் கொட்டுவது ஆகிய பணிகளில் 4,727 நிரந்தர பணியாளர்கள் உள்ளிட்ட 18,845 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்க காலத்​தில், வீடு​களில் சேகரிக்​கப்​பட்ட குப்​பைகள் அனைத்​தும் அப்படியே குப்பை கொட்டும் வளாகங்​களில் கொட்​டப்​பட்டன. இதனால் கொடுங்​கையூர் குப்பை கொட்டும் வளாகத்​தில் 269 ஏக்கர் பரப்​பள​விலும், பெருங்​குடி​யில் 200 ஏக்கர் பரப்​பள​விலும் குப்​பைகள் மலைபோல் குவிந்​துள்ளன.

இந்த குப்பை கொட்டும் வளாகங்​களை​யொட்டி, சுமார் 500 மீட்டர் தொலை​வில் குடி​யிருப்பு பகுதிகள் இருப்​ப​தால், பல்வேறு சுற்றுச்​சூழல் பாதிப்புகளை எதிர்​கொண்டு வருகின்றன. குப்​பையி​லிருந்து மதிப்புள்ள பொருட்களை சேகரிப்​போர், உலோக பொருட்களை எளிதில் எடுப்​ப​தற்காக அவ்வப்​போது குப்​பைகளை தீயிட்டு கொளுத்து​கின்​றனர்.

இதனால் குடி​யிருப்பு பகுதி​களில் காற்று மாசு, சுவாசக்​கோளாறுகள் ஏற்பட்டு பொது​மக்கள் பாதிக்​கப்​படு​கின்​றனர். நிலத்தடி நீர் முற்றி​லும் மாசடைந்​து​விடு​கிறது. இதுபோன்று நாட்​டின் பெரும்​பாலான நகர்ப்புற உள்ளாட்​சிகள் இப்பிரச்​சினையை எதிர்​கொள்வ​தால், நகர்ப்பு​றங்​களில் குப்​பைகளை கையாள்வதை முறைப்​படுத்த, திடக்​கழிவு மேலாண்மை விதிகள் கடந்த 2000-ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்​கப்​பட்​டது. இறுதியாக 2016-ம் ஆண்டு திருத்​தப்​பட்ட விதிகள் வெளி​யிடப்​பட்​டது.

இந்த விதி​களின்​படி, வீடு​களில் உருவாகும் குப்​பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து, வீடு வீடாக வரும் உள்ளாட்சி அமைப்​பின் குப்பை சேகரிப்​பாளரிடம் மட்டுமே வழங்க வேண்​டும். இவ்வாறு வழங்​கு​வதன் மூலம், மக்கும் குப்​பைகளை உரமாக்க முடி​யும். மக்காத குப்​பைகளை மறுசுழற்சிக்கு அனுப்ப முடி​யும். இதன்​மூலம் குப்​பைகள், கிடங்​கு​களுக்கு செல்வது குறை​யும். இதற்கு மாநில அரசுகள் முறையாக நிதி ஒதுக்​காத​தால், இந்த விதிகள் ஏட்டள​விலேயே இருந்​தது.

பின்னர் மத்திய அரசு தூய்மை இந்தியா இயக்​கத்தை தொடங்கி, அதன் மூலம் உள்ளாட்சி அமைப்பு​களுக்கு நிதியை ஒதுக்​கியது. இதன்​படி, சென்னை மாநக​ராட்சி சார்​பில் 196 இடங்​களில் குப்​பையி​லிருந்து உரம் தயாரிக்​கும் மையங்​கள், 23 இடங்​களில் உயிரி- எரிவாயு தயாரிக்​கும் மையங்​கள், 5 இடங்​களில் மின்​சாரம் தயாரிக்​கும் மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்ளன.

சென்னை மாநக​ராட்​சி​யில் வீடு வீடாக குப்​பைகளை வகை பிரித்து பெறுவது இன்றும் சவாலாக உள்ளது. இதனால் வீடு வீடாக குப்​பைகளை சேகரித்து கொடுக்​கும் பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை அனுப​வித்து வருகின்​றனர்.

இதுதொடர்பாக தண்டை​யார்​பேட்டை பகுதியை சேர்ந்த தூய்​மைப் பணியாளர் கூறும்​போது, “பொது​மக்கள் வீடு​களில் குப்​பைகளை வகை பிரித்து வழங்​காத​தால், அந்த சுமை எங்கள் தலையில் விழுகிறது. நாங்கள் வீடு வீடாக சேகரித்து, பின்னர் ஒரு இடத்​துக்கு கொண்டு சென்று அங்கு வகை பிரித்து, உரம் தயாரிக்​க​வும், எரிவாயு தயாரிக்​க​வும் அனுப்பு​கிறோம்.

குப்பைகளை தனித்தனியாக பெறும் வசதி இல்லாத வாகனத்தில்
வகை பிரிக்காமல் குப்பையை கொட்டும் பொதுமக்கள்.

பல நேரங்​களில் பிளேடு, சர்க்கரை நோய்க்கு மருந்து ஏற்றும் ஊசிகள் உள்ளிட்டவை வகை பிரிக்​காமல் குப்​பைகளோடு சேர்த்து கொட்டு​வ​தால், நாங்கள் கையுறை அணிந்​திருந்​தா​லும் எங்கள் கையில் குத்தி காயத்தை ஏற்படுத்​தி​விடு​கிறது. அந்த வலியுடன் உணவுகளை உண்ண முடி​யாமல் அவதிப்​பட்​டிருக்​கிறேன். வீடு​களில் ஒரு நிமிடத்​தில் வகை பிரிக்க வேண்டிய பணியை நாங்கள் நாள் முழு​வதும் செய்ய வேண்​டி​யுள்​ளது. இதை மக்கள் உணர்ந்து வகை பிரித்து வழங்க வேண்​டும்” என்றார்.

கொடுங்​கையூர் பகுதியை சேர்ந்த பெண் தூய்மை பணியாளர் கூறும்​போது, “வீட்டு குப்​பைகளுடன் பலர் உடைந்த பல்பு, டியூப் லைட் மற்றும் உடைந்த முகம் பார்க்​கும் கண்ணாடி, மது பாட்டில்களையும் சேர்த்து கொடுக்கிறார்கள். அவற்றை வகை பிரிக்​கும்​போது, பல நாட்கள் என் கைகளை கிழித்துள்ளன. வேறு வழியில்​லாமல் இத்தொழிலை செய்து கொண்​டிருக்​கிறோம். எங்கள் நலன் கருதி பொது​மக்கள் குப்​பைகளை வகை பிரித்து வழங்க வேண்​டும்” என்றார்.

வியாசர்​பாடியை சேர்ந்த பெண் தூய்​மைப் பணியாளர் கூறும்​போது, “மகளிர் பயன்​படுத்​தும் நாப்​கின்களை தனியாக கொடுக்​கு​மாறு மாநக​ராட்சி அறிவுறுத்​தி​யுள்​ளது. ஆனால் அதை யாரும் பின்​பற்றுவதில்லை. அதை சில நாட்கள் வீட்​டில் வைத்​திருந்து, பின்னர் குப்​பைகளோடு சேர்த்து கொட்டு​கின்​றனர்.

அதை கைகளால் வகை பிரிக்​கும்​போது அருவருப்பு தான் ஏற்படு​கிறது. பொது​மக்கள் எங்களை, அவர்​களின் குடும்பத்​தில் ஒருவராக நினைத்து, மாநக​ராட்சி அறிவுறுத்​தல்படி குப்​பைகளை வகை பிரித்து வழங்க வேண்​டும்” என்றார்.

குப்​பைகளை வகை பிரித்து வழங்​காதது குறித்து கொருக்​குப்​பேட்​டையை சேர்ந்த குடி​யிருப்பு​வாசிகள் கூறிய​தாவது: நாங்கள் வகை பிரித்து கொடுத்​தா​லும் வீடு வீடாக வந்து குப்பை பெறும் பணியாளர் ஒன்றாக​தான் கொட்​டிக்​கொண்டு செல்​கிறார். எங்கள் உழைப்பு​தான் வீணாகிறது.

மாநக​ராட்​சிக்கு சொத்து வரி செலுத்து​கிறோம். வேலை செய்​யும் நிறு​வனம் மூலமாக தொழில் வரியும் பிடித்தம் செய்​கிறது. எதற்​கெடுத்​தா​லும் வரியை போட்டு சம்பா​திக்​கும் அரசு, போதிய ஆட்களை நியமித்து வகை பிரித்து​கொள்ள வேண்​டியது தானே. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எருக்​கஞ்​சேரி பகுதியை சேர்ந்த பொது​மக்கள் கூறும்​போது, குப்​பைகளை வகை பிரிக்​காமலோ, பொது இடத்​தில் கொட்​டி​னாலோ மாநக​ராட்சி நிர்​வாகம் அபராதம் விதிக்​கிறது. ஆனால் விதிகளை மீறும் தனி நபருக்கு அபராதம் விதிப்​ப​தில்லை. அவர்​களுக்கு அபராதம் விதித்​தால்வாக்கு வங்கியை பாதிக்​கும் என அஞ்சுகின்றனர். வீடு​களுக்கு அபராதம் விதித்​தால் மட்டுமே குப்​பைகளை வகை பிரித்து பெறுவதை உறுதி செய்ய முடி​யும்” என்றனர்.

இதுதொடர்பாக மாநக​ராட்சி அதிகாரி​களிடம் கேட்​ட​போது, குப்பைகளை வகை பிரித்து வழங்காத அடுக்கு மாடி குடி​யிருப்பு​கள், வணிக நிறு​வனங்​கள், பொது இடங்​களில் குப்​பைகளை கொட்​டியது தொடர்பாக கடந்த 2 மாதங்​களில் மட்டும் ரூ.2.70 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. குப்​பைகளை 100 சதவீதம் வகை பிரித்து பெறுவதை உறுதி செய்ய, பொது​மக்​களுக்கு விழிப்பு​ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ந்து விழிப்பு​ணர்வு ஏற்படுத்​தப்​படும்” என்​றனர்.

​மாநகரின் தூய்​மை​யை​யும், சுற்றுச்​சூழலை​யும் ​காப்பது மக்​கள் அனை​வரின் கடமை. அந்த பொறுப்பு​ணர்​வுடன் அனை​வரும் வீட்டு அள​வில் மக்​கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்க வேண்​டும். ​மாநக​ராட்​சி​யின் சேவைக்​கு ஒத்​துழைப்​பு தர வேண்டும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x