Published : 16 Oct 2024 06:43 AM
Last Updated : 16 Oct 2024 06:43 AM

மெட்ரோ ரயில்கள் இன்று இயங்கும்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்.16)வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் தாக்கத்தை பொறுத்து, மின்சார ரயில் சேவையில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், பறக்கும் ரயில் மார்க்கத்தில் வழக்கம்போல ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மாநகர பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டது. ரயில்பாதையில் மழைநீர் தேங்கியதால், விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் பாதிப்பு இன்றி இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் நிம்மதியான பயணத்தை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, "மெட்ரோ ரயில் சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. முழு அளவில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கம் குறித்து, உடனுக்குடன் தகவல் அளிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்களில்வழக்கத்தைவிட, பயணிகள் குறைவாகத்தான் பயணிக்கின்றனர்.

இருப்பினும், பயணிகளின் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மெட்ரோ ரயில்களை குறைக்காமல் இயக்குகிறோம். புதன்கிழமையும் (இன்று) மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயக்கப்பட உள்ளது’’ என்றனர்.

மின்சார ரயில் சேவை: சென்னையில் மின்சார ரயில்கள் நேற்று வழக்கம்போல இயங்கின. சில இடங்களில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால், மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. மழையின் தாக்கத்தை பொறுத்து, புறநகர் மின்சார ரயில் சேவையில் புதன்கிழமை (அக்.16) மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும்,சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவை வழக்கம்போல இயக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x